சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் காவல் நிலைய மரண வழக்கில், காவல் ஆய்வாளர் உட்பட ஆறு காவல்துறை அதிகாரிகள் மீது சிபிசிஐடி (CB-CID) போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, அறிவியல் பூர்வ ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள காவல்துறை அதிகாரிகள் விவரம்:
- திலீபன் – காவல் ஆய்வாளர் (Inspector)
- குகன் – உதவி காவல் ஆய்வாளர் (Sub-Inspector)
- காளீஸ்வரன் – காவலர்
- பழனி – காவலர்
- தெய்வேந்திரன் – காவலர்
- மகேந்திரன் – காவலர்
கடந்த மார்ச் 6-ஆம் தேதி, ஒரு வழக்கு தொடர்பாக மானாமதுரை போலீசாரால் ஆகாஷ் கைது செய்யப்பட்டார். பின்னர், மார்ச் 8-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆகாஷின் உடலில் சுமார் 28 இடங்களில் காயங்கள் மற்றும் பல்வேறு எலும்பு முறிவுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் கொலை மற்றும் பட்டியல் சாதி, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தற்போது, விசாரணை முடிவில் ஆறு போலீஸார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, ஆகாஷின் உறவினர்கள் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய உத்தரவின் பேரில், 102 நாட்களுக்குப் பிறகு, கடந்த ஜூன் 17-ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகாஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.
