சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் புறக்கணித்தனர். 84 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டுவது, உள்ளாட்சித்தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே சில அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தவெக பக்கம் தாவிய நிலையில் இன்னும் சிலர் அதே ரூட்டை பிடித்து விஜய் கட்சிக்கு போகலாம் என ராயப்பேட்டை அலுவலகத்தில் ஒரே சலசலப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இன்னொரு பக்கம் இசக்கி சுப்பையாவோ எனக்கு மறுபடியும் எம்எல்ஏ பதவி வேண்டும் என இபிஎஸிடம் பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருக்கிறார். எஸ்.பி.,வேலுமணி, சி,வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உடன் இருக்கிற அந்த உட்கட்சி பஞ்சாயத்தும் இன்னும் முடிந்தபாடில்லை. இந்த சூழ்நிலையில்தான் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.
இந்த கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு பற்றியும், அமமுக டிடிவி தினகரனை மறுபடியும் கட்சிக்குள் சேர்க்கிறது பற்றியும், சசிகலா விஷயம் குறித்தும் ரொம்பவே காரசாரமாக விவாதித்து இருக்கிறார்கள். இந்த கூட்டம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி ”ஏன்டா இந்த கூட்டத்தை நடத்தினோம்” என நொந்து கொள்கிற அளவுக்குதான் இந்த கூட்டம் முடிந்து இருக்கிறது.
கூட்டத்தை புறக்கணித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈரோட்டில் கட்சி நிர்வாகி ஒருவரது அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றார். அதிமுகவின் மற்றொரு குழுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம் போன்றவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் யாரும் மாவட்ட செயலாளர்கள் இல்லை.
