மக்களின் உயிரோடு விளையாடும் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் கடும் ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகரின் மைய்யப்பகுதியில் அமைந்துள்ளது சூரமங்கலத்திற்குட்பட்ட “முல்லை நகர்” முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லம் மற்றும் சேலம் ஜங்கசன் அமைந்திருக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடைப்பட்ட பகுதியும், கூட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் புகழ்பெற்ற கோயில்கள் அமைந்துள்ள இடமுமான சேலம் “முல்லை நகர், இன்று கழிவுநீரும் குப்பைகளும் சூழ்ந்து துர்நாற்றம் வீசும் கழிப்பிடமாக மாறியுள்ளது. மழைக்காலம் வந்தாலே கழிவுநீர் தேங்கி, வீடுகளுக்குள் பூச்சிகளும் பாம்புகளும் புகுந்து, டெங்கு போன்ற கொடிய நோய்களின் உறைவிடமாக இப்பகுதி உருவெடுத்துள்ளது.

பலமுறை மனுக்கள் அளித்தும், தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்காக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கும், மக்களின் தவிப்பைக் கண்டு “ஆட்களை அனுப்பிப் பார்க்கச் சொல்கிறேன்” என அலட்சியத்தின் உச்சமாகப் பதிலளித்த மாநகராட்சி ஆணையரின் பண்ணையாரத்தனமான அணுகுமுறையும் அப்பகுதி மக்களைக் கொதித்தெழச் செய்துள்ளது.
இப்பகுதி தழ்வாக உள்ளதால் மற்ற பகுதிகளில் வழிந்தோடும் மழை நீர் அவ்வப்போது முல்லை நகரை சூழ்ந்து கொள்கிறது.

இங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் குப்பைகளாலும், மண் சரிவுகளாலும் அடைப்பு ஏற்படுத்தி மழைநீர் செல்ல வழி வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய் தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக -23 ஆவது வார்டு , மற்றும் சாய்பாபா கோவில், முனியப்பன் கோவில் போன்ற பகுதிகளில் கழிவு நீர் வெளியேறி மழைநீரோடு தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து முல்லை நகர் பகுதி வாசிகள் பேசுகையில், ”முல்லை நகர் முதல் அருகில் உள்ள ஓடை வரை, கழிவுநீர் கால்வாய்களில் தூர் வாரினால் கழிவு நீர் வெளியேறிவிடும் என மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” துப்புரவு பணியாளர்களுக்கு 25 ஆயிரம் சம்பளம் ஆனால் 10 ஆயிரம் மட்டுமே சம்பளம் தருவதால்தான் அவர்கள் கால்வாய்களை சுத்தம் செய்வதில் என அங்கலாய்கிறார்கள்.

தற்போது, சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் மழையால் மற்ற பகுதிகளில் உள்ள கழிவு நீரும் குப்பைகளும் அடித்து வரப்பட்டு இங்குள்ள குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டு தனித்தீவு போல காட்சியளிக்கிறது. தங்களுடைய குடியிருப்புகளில் பூரான், பாம்புகள் பூச்சி என அனைத்து ஜந்துக்களும் உள்ளே நுழைந்து விடுகிறது. இங்கு வசிப்பதற்கே அச்சமாக உள்ளது. இந்த பகுதியை சுத்தம் செய்ய சொல்லுங்கள்” என அங்கிருந்த பிரபல “நாளிதழ்களின் முகவர் தமிழரசன்”மனமுடைந்து கோரிக்கை வைத்தார்.
அப்பகுதி சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறுகையில், ”எப்படித்தான் இந்த இடத்தில் குப்பை வருகிறது என்று தெரியவில்லை. முனியப்பன் கோவில் அருகே உள்ள பூங்காவில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. மாநகராட்சி இந்த அலுவலகத்தை சுற்றி ஏராளமான குப்பைகள் சேமித்து வைத்து இருக்கிறது. 23-வது வார்டில் நாங்களே இடத்தைச் சுத்தம் செய்தாலும், மீண்டும் குப்பையைக் கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். மழை வரும் போது குப்பைகளும் அடித்து வரப்பட்டு இங்குள்ள கழிவுநீர் கால்வாய்களுக்கு அடித்துச் சென்று அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதனால் நாள் பட்டு தேங்கி நிற்பதால் துர்நாற்றமும், கூடவே நோய்த் தொற்றும் ஏற்பட்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் கலந்த மழைநீரை அக்கற்றி இந்த இடத்தைச் சுத்தம் செய்து, இங்கு குப்பைகளைக் கொட்டுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்” என்றார்.

தமிழரசன்
சாலையோரம் வீசப்பட்டுள்ள குப்பைகள் தேங்கி நிற்கும் கழிவுநீரோடு கலந்து துர்நாற்றம் வீசுவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முகம் சுளித்தபடியே அந்த இடத்தைக் கடந்து செல்வதையும், சிலர் நாற்றம் தாங்காமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்வதையும் பார்க்க முடிந்தது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனரை நாம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு . ”ஆட்களை அனுப்பி பார்க்க சொல்றேன்” என்று பன்னையார் தோரணையில் பேசி அழைப்பை துண்டித்தார் கமிஷ்னர்.
மேலும் தமிழரசன் கூறுகையில், ”முல்லை நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுவதும் தூர் வாரப்பட்டு நகரின் பின்பகுதியில் உள்ள புதிய கால்வாய் செயல்படுத்தி, பள்ளப்பட்டி ஏரிக்கு செல்லும் நீரோடையில் இணைக்கப்பட்டால் கிட்டத்தட்ட 70% பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணன் அலுவலகமும் அருகில் உள்ளது. அவர் இந்த திட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் விரைவில் தீர்வு எட்டி விடும்” என கோரிக்கை வைத்திருக்கிறார்.
