அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் இடையேயான உறவு குறித்து புதிய சர்ச்சைகளும் பரபரப்பான தகவல்களும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியர்களின் கருத்துகள், டிரம்பின் பெண் உதவியாளர் நடாலி ஹார்ப்புடனான நெருக்கம் உள்ளிட்டவை இந்த விவாதத்துக்கு காரணமாகியுள்ளன.
வெள்ளை மாளிகையின் முன்னாள் துணை பத்திரிகை செயலாளர் சாரா மேத்யூஸ், டிரம்ப் பங்கேற்கும் அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மெலானியா கலந்து கொள்வதற்காக அவருக்கு பணம் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு டிரம்ப் தரப்பில் அதிகாரப்பூர்வ மறுப்பு வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, 35 வயது பெண் உதவியாளர் நடாலி ஹார்ப்புடனான டிரம்பின் நெருக்கம் மெலானியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023-ல் நடாலி ஹார்ப் டிரம்புக்கு எழுதியதாகக் கூறப்படும் தனிப்பட்ட கடிதங்களும் கசிந்துள்ளன.
அதில் டிரம்ப் மீதான தனது தீவிர பற்றுதலை அவர் வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், நடாலி ஹார்ப் “மெலானியாவைப் போலவே என் மீது அன்பு வைத்துள்ளார்” என்று டிரம்ப் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரங்களால் வெள்ளை மாளிகைக்குள் மறைமுக அதிகாரப் போட்டி நடப்பதாகவும் கூறப்படுகிறது. ரோஸ் கார்டனில் நடந்த நிகழ்ச்சியின்போது டிரம்ப்–மெலானியா இடையே பதற்றமான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், உதட்டசைவு நிபுணர்கள் அதுகுறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த உரையாடலுக்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
வாஷிங்டனில் நடைபெற்ற Freedom 250 Grand Prix கார் பந்தய நிகழ்வின்போது, டிரம்ப் அருகில் மெலானியா அமர்ந்திருந்த நிலையில் நடாலி ஹார்ப் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 12 விநாடிகளுக்குப் பிறகு டிரம்ப் மெலானியாவைத் தொட முயன்றதாகவும், அவர் கோபத்துடன் கையைத் தட்டிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றதாகவும் கூறப்படும் வீடியோ வைரலாகியுள்ளது. உதட்டசைவு நிபுணர்களின் கணிப்புப்படி, மெலானியா ஏதோ எச்சரிக்கை விடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நடாலி ஹார்ப், வெள்ளை மாளிகை வட்டாரங்களில் “ஹ்யூமன் பிரிண்டர்” என அழைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் எங்கு சென்றாலும் போர்ட்டபிள் பிரிண்டரை எடுத்துச் செல்லும் அவர், டிரம்பைப் பாராட்டும் செய்திகள் மற்றும் அவருக்குச் சாதகமான கருத்துக்கணிப்புகளை உடனுக்குடன் அச்சிட்டு வழங்குவதாகக் கூறப்படுகிறது. அவரது அதீத விசுவாசமும் தனிப்பட்ட கடிதங்களும்தான் மெலானியாவின் கோபத்துக்கு காரணம் என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளில் இருந்து மெலானியா விலகியிருந்ததால் விவாகரத்து வதந்திகளும் பரவின. பின்னர் ரோஸ் கார்டன் நிகழ்ச்சியில் தோன்றிய அவர், “எல்லாரும் என்னை மிஸ் பண்ணீங்களா? இதோ நான் வந்துட்டேன்” என்று கூறி வதந்திகளை நகைச்சுவையாகக் கிண்டல் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் டிரம்ப் உதவியாளர் அந்தோணி ஸ்காரமுச்சி, டிரம்ப்–மெலானியா உறவு காதலை அடிப்படையாகக் கொண்டதைவிட “பரிவர்த்தனை அடிப்படையிலான உறவு” போலத் தோன்றுவதாகக் கூறியுள்ளார். இதுவும் தற்போது விவாதமாகியுள்ளது. அமெரிக்க ஊடகங்கள் இந்த விவகாரத்தை “வெள்ளை மாளிகையின் மிக மோசமான ரகசியம்” என விமர்சித்து வருகின்றன.
மேலும், கடந்த ஜூலை மாதம் டிரம்ப் ஸ்காட்லாந்து சென்றபோது மெலானியாவை அமெரிக்காவில் விட்டுவிட்டு நடாலி ஹார்ப்பை மட்டும் உடன் அழைத்துச் சென்றதாக சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட குடும்பக் கோபமே மெலானியா பொது நிகழ்ச்சிகளில் இருந்து விலகியதற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
‘மரைன் ஒன்’ ஹெலிகாப்டரில் இருவரும் பயணித்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் டிரம்ப் கோபமாகப் பேச முயல்வதும், மெலானியா அவரைத் தொடவிடாமல் விலகி ஜன்னல் பக்கம் திரும்பி அமர்வதும் தெரிகிறது. உடல்மொழி நிபுணர் ஜூடி ஜேம்ஸ், இது தம்பதியருக்குள் இருக்கும் உணர்ச்சிபூர்வமான விலகலைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் மைக்கேல் உல்ஃப் எழுதிய புத்தகத்தில், டிரம்ப் டவரில் வசித்தபோது மெலானியாவுக்குத் தனி அடுக்குமாடி குடியிருப்பு இருந்ததாகவும், வெள்ளை மாளிகையிலும் இருவரும் ஒரே அறையைப் பகிரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டிரம்பின் நீதிமன்ற வழக்குகளின்போது, அவரது ஊழியர்களுக்கே மெலானியா எங்கு வசிக்கிறார் என்பது தெரியாத நிலை இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகவியலாளர் மேரி ஜோர்டான் எழுதிய புத்தகத்தில், மகன் பாரன் டிரம்பின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மெலானியா திருமண ஒப்பந்தத்தில் ரகசியமாக மாற்றங்கள் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. டிரம்ப் அதிபரான பிறகு உடனடியாக வெள்ளை மாளிகைக்கு குடிபெயர மறுத்ததற்கும், சொத்து மற்றும் வாரிசுரிமை தொடர்பான ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட வேண்டும் என அவர் வலியுறுத்தியதே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், டிரம்ப் மற்றும் மெலானியா இடையேயான திருமண வாழ்க்கை மிகவும் விசித்திரமானது என்ற கருத்துகளும் வெளியாகியுள்ளன. டிரம்ப் டவரில் தனித்தனி வசிப்பிடங்கள் இருந்ததாகவும், வெள்ளை மாளிகையில் இருந்தபோதும் ஒரே அறையில் தங்கவில்லை என்றும் கூறப்படும் தகவல்கள் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
மேலும், மெலானியா நீண்ட நாட்கள் பொதுவெளியில் தோன்றாததற்கு குடும்பப் பிரச்சினைகளே காரணம் என சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் பரவின. ஆனால், மெலானியா தனது தனிப்பட்ட பணிகளில் கவனம் செலுத்தியதாலேயே பொது நிகழ்ச்சிகளில் குறைவாக பங்கேற்றதாக அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதனால் உண்மை நிலை என்ன என்பது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன.
இதற்கிடையில், பொதுவெளியில் இருவரின் உடல்மொழி குறித்த வீடியோக்கள், பழைய பேட்டிகள் மற்றும் புத்தகங்களில் இடம்பெற்ற தகவல்கள் மீண்டும் பகிரப்பட்டு வருகின்றன. இதுவே சர்ச்சைக்கு மேலும் தீனி போட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் இது பரபரப்பாக பேசப்படுகிறது.
மெலானியாவின் பொது வெளித் தோற்றக் குறைவு குறித்து வெள்ளை மாளிகை, விளம்பரத்திற்காகத் தோன்றுவதைவிட திரைக்குப் பின்னால் இருந்து முடிவுகளை உருவாக்குவதையே அவர் விரும்புவதாக விளக்கம் அளித்துள்ளது. ரஷ்யா–உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்கும் பணிகளில் அவர் ரகசியமாக ஈடுபட்டு வருவதாகவும் டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நடாலி ஹார்ப்பை மெலானியாவுடன் ஒப்பிட்டு டிரம்ப் பேசியதாகக் கூறப்படும் தகவல் சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. டிரம்ப்–மெலானியா உறவு குறித்து வெளியாகும் பல தகவல்கள் குற்றச்சாட்டுகள், ஊடகச் செய்திகள் மற்றும் தனிநபர்களின் கருத்துகளின் அடிப்படையிலானவை என்பதால், அவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. இருந்தபோதிலும், இந்த விவகாரம் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
