தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் திருட்டில் ஈடுபட்ட 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர், தங்களை அடையாளம் கண்டுகொண்ட பள்ளி முதல்வரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சுமார் 50 வயதுடைய ரூபா ரெட்டி என்பவர் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவர்கள் இருவர், ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும், விலை உயர்ந்த பைக் மற்றும் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில், பள்ளி முதல்வரின் வீட்டில் திருடத் திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மாணவர்கள் இருவரும் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளனர். இதற்கு முன்பாகவே விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்களின் பணம் மற்றும் செல்போன்களை அவர்கள் திருடியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பள்ளி முதல்வர் ரூபா ரெட்டிக்கு தெரியவந்ததையடுத்து, இருவரின் பெற்றோர்களையும் அழைத்து, மற்றவர்கள் முன்னிலையில் கண்டித்துள்ளார். மேலும், தண்டனையாக அவர்களை விடுதியில் இருந்து நீக்கி, வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களாக மாற்றியுள்ளார்.
இதனால், முதல்வர் மீது அந்த மாணவர்களுக்கு கடும் கோபமும், பழிவாங்கும் எண்ணமும் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ரூபா ரெட்டியின் வீட்டில் எப்போதும் அதிகளவில் பணம் இருக்கும் என அவர்கள் நினைத்துள்ளனர்.
சம்பவம் நடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி, ரூபா ரெட்டியின் கணவர் ஹைதராபாத் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் வீட்டில் தனியாக இருப்பதை மாணவர்கள் கண்காணித்துள்ளனர். அதற்கு முன்பாக சுமார் ஐந்து நாட்கள் வீட்டைச் சுற்றி நோட்டமிட்ட அவர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள், வீட்டுக்குள் நுழையும் வழி உள்ளிட்டவற்றை முன்கூட்டியே ஆய்வு செய்து திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி, ஒரு மாணவர் சுவரை ஏறிக் குதித்து வீட்டுக்குள் நுழைந்து சுமார் ரூ.2.50 லட்சம் பணத்தைத் திருடியுள்ளார். மற்றொரு மாணவர் வெளியே நின்று கண்காணித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த ரூபா ரெட்டி, திருட வந்த மாணவரை பார்த்து அடையாளம் கண்டுகொண்டுள்ளார்.

இதையடுத்து, தன்னை போலீசாரிடம் காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற அச்சத்தில் அந்த மாணவர், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரூபா ரெட்டியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் கத்தியால் 27 முறை குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த ரூபா ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை நடைபெறுவதற்கு சற்று முன்பு, ரூபா ரெட்டி தனது அத்தையுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது தொலைபேசியில் திடீரென “பாபு…” என்று ரூபா ரெட்டி அழைத்த குரல் கேட்டுள்ளது. அதன்பிறகு செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு, போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது.
தெலங்கானா பகுதியில் மாணவர்கள் அல்லது சிறுவர்களை பொதுவாக “பாபு” என்று அழைப்பது வழக்கம் என்பதால், இந்த வார்த்தை போலீஸ் விசாரணையில் முக்கிய தடயமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் 80-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் சந்தேக நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எனினும், கொலை தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, ரூபா ரெட்டி இறப்பதற்கு முன்பு கூறியிருக்கக்கூடிய “பாபு” என்ற வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு நன்கு அறிமுகமான சிறுவர்கள் அல்லது மாணவர்கள் யாராவது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் திருப்பினர்.
அதே நேரத்தில், சம்பவ இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் மற்றும் கைரேகைகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். விசாரணையின் அடிப்படையில், ரூபா ரெட்டியின் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த இரண்டு 16 வயது மாணவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதற்கிடையே, சம்பவத்துக்குப் பிறகு மாணவர்களில் ஒருவர் திடீரென அதிகளவில் பணத்தைச் செலவு செய்து ஆடம்பரப் பொருட்களை வாங்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அவரது திடீர் பணப்புழக்கத்தையும் போலீசார் கண்காணித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் விசாரணை நடத்தியபோது, இரு மாணவர்களும் சம்பவத்தில் தொடர்புடையது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தில் மீதமிருந்த ரூ.1.54 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்தப் பணத்தை மாணவர்கள் தங்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் இருந்த மூன்று ரூ.500 நோட்டுகளில் மனித ரத்தக் கறைகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. தடயவியல் பரிசோதனையில் அந்த ரத்தக்கறைகள் கொலை செய்யப்பட்ட பள்ளி முதல்வர் ரூபா ரெட்டியுடையது என்பது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு எதிரான முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
விசாரணையில், கைது செய்யப்பட்ட இரு மாணவர்களுக்கும் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். எளிதாகப் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது தொடர்பாக யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்கள் தொடர்ந்து தேடியதாகவும், அதன் பின்னரே திருட்டுத் திட்டத்தை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.
திருடச் சென்றபோது, வீட்டிற்குள் நுழைந்த மாணவர் தனது முகத்தை முகமூடியால் மறைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், ரூபா ரெட்டி அவருடன் போராடியபோது மாணவனின் முகமூடி கீழே விழுந்துள்ளது. இதனால், தன்னை பள்ளி முதல்வர் அடையாளம் கண்டுகொண்டதை உணர்ந்த மாணவர், போலீசில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் அவரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரு 10-ஆம் வகுப்பு மாணவர்களையும் போலீசார் கைது செய்து, சிறார் நீதிமன்றமான Juvenile Justice Board முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.
சொகுசு வாழ்க்கை, விலை உயர்ந்த பைக் மற்றும் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை, ஏற்கனவே இருந்த திருட்டுப் பழக்கம், முதல்வர் மீது ஏற்பட்ட கோபம் ஆகியவை இணைந்து, இரண்டு பள்ளி மாணவர்களை இத்தகைய கொடூரமான குற்றத்தில் ஈடுபடச் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மாணவர்களின் இணையப் பயன்பாடு, போதைப் பழக்கம் மற்றும் குற்றச் செயல்களின் மீதான கண்காணிப்பு குறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
