கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்து, நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு ரூ.38.79 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகையை மோசடி செய்த வழக்கில், முன்னாள் நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகன் உள்ளிட்ட இருவருக்கு தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் சிரஸ்தேதாரின் உதவியாளராகப் பணியாற்றியவர் அறிவுச்செல்வி. பின்னர், முன்னாள் உதவி தலைமைப் பதிவாளராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற வாகன விபத்து வழக்கு ஒன்றில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10,565 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அறிவுச்செல்வி போலி ஆவணங்களைத் தயாரித்து, நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு, அந்த இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்து 78 ஆயிரமாக மாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், நீதிமன்ற வைப்புத்தொகையில் இருந்த மேலும் 5 விபத்து வழக்குகளின் தீர்ப்பு நகல்களைத் திருத்தி, மொத்தம் ரூ.38 லட்சத்து 79 ஆயிரத்து 982 இழப்பீட்டுத் தொகையை மோசடியாகப் பெற்றுள்ளார்.
இந்தப் பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மட்டுமின்றி, தனது மகன் வரதராஜன் மற்றும் உறவினரான தமிழரசன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
நீதிமன்ற ஊழியர் ஒருவரின் வங்கிக் கணக்கிலும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கணக்குகளிலும் தொடர்ந்து அதிக அளவில் பணப் பரிமாற்றங்கள் நடைபெறுவதை கவனித்த வங்கி மேலாளர் சந்தேகம் அடைந்தார். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ரகசியமாக தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நீதிமன்ற ஆவணங்களைத் திருத்தியது, நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்தியது மற்றும் இழப்பீட்டுத் தொகையை முறைகேடாகப் பெற்றது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி விசாரணைக்குப் பின்னர், நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியான அறிவுச்செல்விக்கு மொத்தம் 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகன் வரதராஜன் மற்றும் உறவினர் தமிழரசன் ஆகிய இருவருக்கும் தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த செந்தில்குமார் என்பவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றத்தை நிரூபிக்க வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மொத்தம் 44 அரசு தரப்பு சாட்சிகள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். மேலும், காசோலைகள், வங்கிப் பரிவர்த்தனை நகல்கள் உள்ளிட்ட 103 முக்கிய ஆவணங்கள் சாட்சியங்களாக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.
வழக்கமாக இதுபோன்ற நிதி மோசடி வழக்குகள் நீண்ட காலம் நடைபெறும் நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சுமார் 80 நாட்களுக்குள் சாட்சிகள் விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மோசடி செய்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்தக் கடுமையான தண்டனை தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் காசோலைகள் கையாளப்படும் விதம் குறித்து முழுமையாக அறிந்திருந்த அறிவுச்செல்வி, திட்டமிட்டு இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
ஒரு வங்கி மேலாளரின் சந்தேகமும், அவர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அளித்த தகவலும் இந்த மிகப்பெரிய மோசடி வெளிச்சத்திற்கு வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ரூ.38.79 லட்சம் நீதிமன்ற இழப்பீட்டுத் தொகையை போலி ஆவணங்கள் மற்றும் போலி கையெழுத்து மூலம் மோசடி செய்த வழக்கில், முன்னாள் நீதிமன்ற ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த இருவருக்கு தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
