நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி, தற்போது திரையுலக வட்டாரத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
தனது கடந்த கால காதல் உறவு குறித்து வெளிப்படையாகப் பேசிய அனுபமா, அந்த உறவில் தான் சந்தித்ததாகக் கூறப்படும் நார்சிசிஸ்டிக் அப்யூஸ், மன அழுத்தம், கட்டுப்பாடுகள், தன்னைத் தானே இழந்தது போன்ற பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியிருந்தார்.

அனுபமா தனது முன்னாள் காதலரின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது பேச்சை ரசிகர்கள் நடிகர் துருவ் விக்ரமுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில், அனுபமாவின் பேட்டிக்குப் பிறகு துருவ் விக்ரம் வெளியிட்டதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
அனுபமா தனது பேட்டியில், “தனது முன்னாள் காதலன் ஒரு நாள் ‘ரெமோ’ மாதிரி இருப்பார். மறுநாள் ‘அந்நியன்’ மாதிரி ஆகிவிடுவார். அதன்பிறகு அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல வந்து ‘அம்பி’ போல் மன்னிப்பு கேட்பார்” என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே துருவ் விக்ரமும் அனுபமா பரமேஸ்வரனும் இணைந்து ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலித்து வந்ததாகப் பல செய்திகள் வெளியாகின. அப்போது இருவருமே அந்தக் காதல் குறித்த தகவல்களை வெளிப்படையாக மறுக்கவில்லை.
மேலும், சமூக வலைதளங்களில் இருவரும் ஒருவரது பதிவுகளுக்கு மற்றொருவர் தொடர்ந்து லைக்குகள் மற்றும் ஹார்ட்டின்களை வழங்கி வந்ததால், அவர்களுக்குள் காதல் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு அனுபமா தனது வாழ்க்கை குறித்து பேசும்போது, “தன்னைத் தானே மீண்டும் தேடிக்கொண்டதாகவும், கடந்த காலத்தில் இருந்த கட்டுப்பாடுகளை உடைத்துவிட்டதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.
இதனால் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா இடையே பிரேக்கப் ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்வியும் அப்போது எழுந்தது.
இந்த சூழலில், மலையாள சேனல் ஒன்றுக்கு அனுபமா அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனுபமா தனது முன்னாள் காதலர் குறித்து இவ்வளவு விஷயங்களைப் பேசியுள்ள நிலையில், துருவ் விக்ரம் இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில், துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோவும் வைரலாகியுள்ளது. அதில், ஓர் இளைஞர் கடல் அலைகளை நோக்கி வேகமாக ஓடுவதும், பின்னர் கடல் அலைகளுக்குள் கோபத்துடனும் விரக்தியுடனும் நடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், துருவ் விக்ரம் மன அழுத்தத்தில் இருக்கிறாரா? அதனால்தான் இதுபோன்ற பதிவை வெளியிட்டுள்ளாரா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி வெளியான ஒரு பேட்டியும் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அந்தப் பேட்டியில், “வாழ்க்கையில் ஒன் சைடு லவ் செய்திருக்கிறீர்களா?” என அனுபமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் முன்பே துருவ் விக்ரம், அனுபமாவின் கையில் இருந்த ‘Yes’ என்ற பதிலை எடுத்துக் காண்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் சற்று அதிருப்தியடைந்த அனுபமா, “நான் சொல்ல வேண்டிய பதிலை நீ சொல்கிறாயே” என்ற வகையில் செல்லமாக அவரைக் கண்டித்தார். அதற்கு துருவ் சிரித்தபடி இருந்தார்.
அதே பேட்டியில், “லவ் மேரேஜா? அரேஞ்ச் மேரேஜா?” என கேட்கப்பட்டபோது, இருவருமே காதல் மற்றும் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என இரண்டையும் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்களை தற்போது மீண்டும் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், அனுபமா தனது பேட்டிகளில் குறிப்பிட்ட சம்பவங்களுக்கும் துருவ் விக்ரமின் பழைய செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என விவாதித்து வருகின்றனர்.

மேலும், அனுபமாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்க்கும்போது, துருவ் விக்ரமின் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் தொடர்பான புகைப்படங்கள் அதிகமாக இடம்பெற்றிருப்பதாகவும் ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல், துருவ் விக்ரமின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரது சொந்த புகைப்படங்களே அதிகமாக இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இருவரும் தற்போது சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, அனுபமாவின் தாயார் சுனிதா பரமேஸ்வரன், ஜூலை 19ஆம் தேதி தனது மகள் அனுபமாவுடன் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து, அனுபமா மட்டுமல்லாமல் அவரது தாயாரும் தனது மகள் அளித்த பேட்டிகள் தொடர்பான பதிவுகளை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பிரேக்கப் விவகாரத்தில் அனுபமாவைவிட அவரது தாயார்தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே துருவ் விக்ரம் ஒரு குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டதும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அது தொடர்பான விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், தற்போது அனுபமா பரமேஸ்வரனின் பேட்டி மற்றும் துருவ் விக்ரமின் இன்ஸ்டாகிராம் பதிவு ஆகியவை இணைத்து பேசப்பட்டு வருவதால், இருவருக்கும் இடையேயான உறவு குறித்த சர்ச்சை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்கு துருவ் விக்ரம் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் என்ன விளக்கம் அளிக்கப்படப் போகிறது என்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது.
