நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முழுமையாக திரும்பப் பெறாவிட்டால், நாடு தழுவிய அளவில் மீண்டும் போராட்டம் தொடங்கப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் இக்கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 36 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் (FIR) மற்றும் வழக்குகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே தங்களின் முக்கியக் கோரிக்கை என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் கூறுகையில், மத்திய அரசு அளித்த வாக்குறுதியின்படி வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்பதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை உடனடியாக வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த உறுதிமொழி வழங்கப்படாவிட்டால், மீண்டும் நாடு தழுவிய போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்தார்.
மேலும், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும், எதிர்காலத்தில் அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்படாது என்றும், போலீஸ் மூலம் எந்தவித துன்புறுத்தலும் இருக்காது என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பீகார் உள்துறை அமைச்சகமும், அசாம் அரசும் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும், மற்ற மாநிலங்களிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
போராட்டங்களின் போது போலீசாரின் அத்துமீறல்கள், வழக்குப் பதிவுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை நாடு முழுவதும் கண்காணித்து பதிவு செய்வதற்காக ‘சாக்ஷி’ (Sakshi) என்ற புதிய இணைய தளத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளம் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை பதிவு செய்து சட்ட உதவி பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் தொடர்பாக, “கரப்பான்பூச்சி” என்ற சொல் அரசியல் விமர்சனங்களில் இளைஞர்கள், வேலையில்லாதவர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகம் செயல்படுபவர்களை இழிவுபடுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டதாகவும், அதையே தங்களது எதிர்ப்பின் அடையாளமாக மாற்றிக் கொண்டு இந்த இயக்கத்தை முன்னெடுத்து வருவதாகவும் கட்சியினர் விளக்கம் அளித்துள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்பதே தங்களது அடிப்படை கோரிக்கை என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
