“போதும்டா சாமி.. எனக்கு அந்தப் பதவியே வேண்டாம்!” என்று கூறி, அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியைக் கைகழுவிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தற்போதைய எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு முற்றிலும் எதிரானதொரு டிராக்கில் வண்டி ஓட்டத் தொடங்கியிருப்பதுதான் ஹாட் டாபிக்.
கிட்டத்தட்ட 30 மாவட்டச் செயலாளர்களுடன் மொத்தமாக ஒட்டுமொத்தப் படையையும் திரட்டிக்கொண்டு, ஆளுங்கட்சியான தவெக-வில் ஐக்கியமாகிவிடலாம் என்ற வேலுமணியின் பிளான், கடந்த வாரம் வரை மிக ரகசியமாக அரங்கேறி வந்தது.
வேலுமணியுடன் கைகோர்த்த சீனியர்கள்
அதிமுகவின் கொங்கு மண்டலத்து கோட்டையாகக் கருதப்படும் கோவையில் எடப்பாடிக்கு எதிராக வேலுமணி காய் நகர்த்திய அதே வேளையில், தவெகவில் செங்கோட்டையன் மற்றும் சமீபத்தில் இணைந்த புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகியோரும் இந்த ரகசிய மூவ்களில் வேலுமணியுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு இனி வருங்காலம் கடினம் என்பதை உணர்ந்தே, இந்த சீனியர் பட்டாளம் தவெக தலைவர் விஜய்யின் பக்கம் தஞ்சம் புகத் துடித்தது. இதற்கான அஸ்திவாரப் பணிகள் அனைத்தும் திரைக்குப் பின்னால் பக்காவாக முடிந்து, “எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்” என்கிற கட்டத்தில்தான் அந்தப் பேரிடி வந்து இறங்கியது.
வேலுமணியை உலுக்கிய பயம்
தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவதில் தற்போது எழுந்துள்ள பல்வேறு சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்கள், வேலுமணி தரப்பின் தலையில் இடியாக விழுந்துள்ளது.
தற்போது அதிமுகவின் எம்எல்ஏ-க்களாக இருக்கும் வேலுமணி, அவரது ஆதரவாளர்கள் தவெக-விற்குச் செல்ல வேண்டுமானால், சட்டப்படி தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
“ஏற்கனவே காலியாக இருக்கும் தொகுதிகளுக்கே தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்த லட்சணத்தில், கையில் இருக்கும் எம்எல்ஏ பதவிகளையும் அவசரப்பட்டு ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் போனால், அந்தத் தொகுதிகளுக்கும் தேர்தல் தள்ளிப்போகும். இறுதியில் நாம் எம்எல்ஏ-வும் இல்லாமல், பதவியும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்…” என்கிற திக் திக் டென்ஷன் இப்போது வேலுமணியின் கண்ணுக்குள் வந்து போகிறதாம்.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை
பழைய பழமொழி ஒன்று அடிக்கடி காதில் ஒலிக்கத் தொடங்க, இப்போதைக்கு அவசரப்பட்டு தவெக பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்கிற தீர்க்கமான முடிவுக்கு வேலுமணி வந்துவிட்டதாகத் தெரிகிறது.
“அரசியல் மாற்றம் என்பது உடனடியாக நடப்பதல்ல. இந்த இடைத்தேர்தல் மேட்டரில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தல் களம் சாதகமாக மாறும் வரை அமைதி காப்பதே புத்திசாலித்தனம்” எனத் தனது ஆதரவு வட்டாரத்திற்கு வேலுமணி சிக்னல் கொடுத்துள்ளார்.
கொங்கு சிங்கத்தின் இந்தத் திடீர் பின்வாங்கல், இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமிக்குச் சற்றே நிம்மதியைத் தந்திருந்தாலும், ஐந்து தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு வேலுமணி நடத்தப்போகும் அந்த ‘மெகா ட்விஸ்ட்’ ஆட்டத்திற்கு அதிமுக தலைமை இப்போதே தயாராக வேண்டியிருக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.
