தவெக கூட்டணி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களாக தவெக நோக்கி நகர்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், ஆரம்பத்தில் சற்றே அரண்டுபோன அதிமுக, தற்போது டெல்லி மேலிடத்தின் ஆசியோடு தவெக அரசுக்கு செக் வைக்கத் தயாராகிவிட்டது என்பதையே சேலம் சூரமங்கல கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு உணர்த்துகிறது.

தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் பெரிய அளவில் ஒட்டாமல், தள்ளியே நின்ற எடப்பாடி பழனிசாமி, தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக பக்கம் தாவுவதை உடனடியாகத் தடுக்காவிட்டால் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்ந்து, நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல்கள்.
“இருக்கிற கட்சிக்காரர்களை முதலில் அரவணைத்துச் செல்லுங்கள், கட்சியை முழுமையாக ஒருங்கிணைக்கப் பாருங்கள். இனி ஒரு எம்.எல்.ஏ கூட தவெக பக்கம் போகாதபடி டெல்லி பார்த்துக் கொள்ளும்” என அமித் ஷா கொடுத்த அதிரடி உத்தரவாதம்தான், இப்போது இபிஎஸ்-க்கு புதிய தெம்பைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ரகசிய டீலிங்கின் முதல் வெளிப்பாடுதான், தமிழகத்தில் தவெக பக்கம் தாவிய எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல், ஒரு மர்மமான மௌனம் நீடித்து வருவது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இன்னொரு பக்கம், கட்சி தாவிய அந்த எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள மனு மீது, டெல்லியின் ஆசியோடு மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயக் காத்திருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

இந்த அரசியல் புயலுக்கு நடுவேதான், சேலம் சூரமங்கலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தவெக அரசை நோக்கி வார்த்தை ஏவுகணைகளை வீசியுள்ளார்.
“மத்திய அரசைப் பற்றி இவர்களுக்கு இன்னும் முழுசாத் தெரியல. சும்மா விளையாட விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூர் ஊழல் வழக்குல மட்டும் டெல்லி கை வச்சு ஒருத்தரைத் தூக்கினால் போதும்… இந்த தவெக அரசே மொத்தமாக ஆட்டம் கண்டுவிடும். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சிக்கும் என்ன நிலைமை நடந்தது என்பது இந்த கத்துக்குட்டிகளுக்குத் தெரியாது” என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசியுள்ளார்.
இபிஎஸ்-ஸின் இந்த ‘டெல்லி மிரட்டல்’ பேச்சைக் கேட்டு, அதுவரை சோர்ந்து போயிருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் புதிய உத்வேகமும், தெம்பும் தொற்றிக் கொண்டுள்ளது.
“தவெக அரசை டெல்லி நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் கவிழ்க்க முடியும்” என்கிற ரீதியில் இபிஎஸ் வீசியுள்ள இந்த அரசியல் சவுக்கடி, தவெக ஆட்சி மேலிடத்திற்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
யம்மாடி ஆத்தாடி… கழுத்தில் 3 கிலோ தங்கம்..! துரைமுருகன் பினாமியா..? யார் இந்த ‘நடமாடும் நகைக்கடை..?
