https://republictn.com/

ரூ.1.80 கோடி பண மோசடி மற்றும் மிரட்டல் புகார் தொடர்பாக, ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் காவல்துறையினர் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் வினோத் மற்றும் அவரது குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் வெளியான ‘அனந்தன் காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக, ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘தாஹிர் சினி டெக்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து கேமரா, லைட்டிங் உள்ளிட்ட விலையுயர்ந்த திரைப்பட உபகரணங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான மொத்த வாடகை பில் தொகை ரூ.2.12 கோடியாகும்.

படம் வெளியாகும் முன்பே நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்திவிடுவதாக தயாரிப்புத் தரப்பு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்ததாகவும், இருப்பினும் பலமுறை நினைவூட்டியும், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளுக்குப் பதிலளிக்காமல், ரூ.1.80 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் கணக்காளர் ஜாவேத் அலி, ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், நிலுவைத் தொகையைக் கேட்டு சென்ற நிறுவனத்தின் மேலாளரை நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் வினோத் மற்றும் ஆர்யாவின் தனிப்பட்ட உதவியாளர் கிஷோர் ஆகியோர் மிரட்டியதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 318 (மோசடி) மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் வினோத் மற்றும் உதவியாளர் கிஷோர் ஆகிய மூவர் மீதும் ஜூப்ளி ஹில்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த சட்டச் சிக்கல் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் ஆர்யா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது பதிலோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago