நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகன் தேவ் சூர்யா, பொதுவெளியில் முதன்முறையாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான நிகழ்வில் தனது திட்டத்தை தன்னம்பிக்கையுடனும் நிதானத்துடனும் விளக்கியுள்ள அவரது பேச்சு, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
நடிகர் சூர்யா – ஜோதிகா தம்பதியினரின் மகனான தேவ் சூர்யா, செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான நிகழ்வொன்றில் பங்கேற்று தனது அனுபவங்களையும், திட்டத்தையும் பகிர்ந்து கொண்டார். பொதுமக்கள் முன்னிலையில் அவர் பேசியது இதுவே முதல் முறை என்பதால், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவின் தொடக்கத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட தேவ் சூர்யா, மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியின் மாணவர் எனத் தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு ஃபெலோஷிப் திட்டத்தில் சேர்வதற்கு முன்பே தனக்கு கோடிங் மற்றும் மெஷின் லேர்னிங் குறித்த அடிப்படை அறிவு இருந்ததாகவும் கூறினார்.
இந்தத் திட்டத்தில் இணைந்த பிறகு, வெறும் கோடிங் கற்றுக்கொள்வதைத் தாண்டி, நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நிபுணர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஒரே நாளில் ஒரு முழுமையான திட்டத்தை உருவாக்கி, அதனை மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளக்கிக் காட்டிய சக மாணவர்களின் திறமையும் வேகமும் தனக்கு பெரும் உத்வேகமாக இருந்ததாகவும் தேவ் சூர்யா கூறினார்.
தேவ் சூர்யா பேசிய நிதானமான குரல், தெளிவான உச்சரிப்பு மற்றும் இயல்பான உடல்மொழி ஆகியவை, நடிகர் சூர்யாவின் ஆரம்பகால திரைப்படங்களில் அவர் பேசிய விதத்தை நினைவூட்டுவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், தேவின் அடக்கமான அணுகுமுறையும், தன்னம்பிக்கை மிக்க பேச்சும், சூர்யா – ஜோதிகா தம்பதியினரின் வளர்ப்பு முறைக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு தேவ் சூர்யா கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் பெற்றிருந்தார். தற்போது கல்வியிலும், தொழில்நுட்பத்திலும் அதிக ஆர்வம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவெளியில் முதன்முறையாக பேசிய தேவ் சூர்யாவின் இந்த வீடியோ, அவரது தன்னம்பிக்கை, தெளிவான சிந்தனை மற்றும் இயல்பான பேச்சு காரணமாக இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
