ஈரானின் முன்னாள் உச்சநிலைத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கில், அவரது மகனும் தற்போதைய உச்சநிலைத் தலைவருமான மொஜ்தபா காமேனி பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் இஸ்ரேலிடம் இருந்து வரக்கூடிய ஆபத்துகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஈரானின் தற்போதைய உச்சநிலைத் தலைவரான மொஜ்தபா காமேனி, தனது தந்தையான மறைந்த முன்னாள் உச்சநிலைத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள விரும்பினாலும், தற்போதைய பதற்றமான சூழலில் அவருக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என ஈரான் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் மொஜ்தபா காமேனியை தனது முக்கிய இலக்குகளில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளதாகவும், அவர் பொதுமக்கள் மத்தியில் தோன்றினால் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் அல்லது வான்வழித் தாக்குதல்கள் மூலம் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானை 36 ஆண்டுகள் வழிநடத்திய முன்னாள் உச்சநிலைத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் உயிரிழந்தார்.
போர்ச் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள், ஜூலை 4ஆம் தேதி முதல் ஜூலை 9ஆம் தேதி வரை ஈரான் மற்றும் ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் தொடங்கும் இறுதிச்சடங்கு நிகழ்வுகள், புனித நகரமான கோம் வழியாகச் சென்று, ஜூலை 9ஆம் தேதி அலி காமேனியின் சொந்த ஊரான மஷ்ஹாத் நகரில் அமைந்துள்ள இமாம் ரெசா தர்காவில் நல்லடக்கத்துடன் நிறைவடையவுள்ளன.
இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும், சர்வதேச முக்கிய பிரமுகர்களுக்கும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியத் தரப்பிலிருந்தும் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மற்றும் சர்வதேசத் தலைவர்கள் இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்தத் தந்தையின் இறுதிச்சடங்கில், நாட்டின் தற்போதைய உச்சநிலைத் தலைவராக இருக்கும் மகனே பாதுகாப்பு காரணங்களால் நேரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது, சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
