https://republictn.com/

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் வரும் ஜூலை 31-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் பிரபல சீரியல் நடிகர் ஜெமினி மணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் பேசியுள்ள பழைய நினைவு தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஜெமினி மணியின் மகனிடம் ஜேசன் சஞ்சய் பேசுகையில், “எங்க அப்பாவுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன். அப்போது என்னைக் காருக்கு தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள். இந்தச் சம்பவத்தை நான் மறந்துவிட்டேன். ஆனால், ஏப்ரல் மாதம் உங்கள் அப்பாவுடன் படப்பிடிப்பில் இருந்தபோது, ‘அன்று உங்களைத் தூக்கிக்கொண்டு போனது நான்தான்’ என்று அவரே அந்த நினைவை எனக்கு ஞாபகப்படுத்தினார்” என்று கூறியிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து நடிகர் ஜெமினி மணி, சமீபத்தில் அளித்த பேட்டியில் விரிவாக விளக்கியுள்ளார்.

அதில், “ஜேசன் சஞ்சய் அடையாறில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம் அது. அப்போது நான் ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன்.

எங்களது நிர்வாக இயக்குநரின் மகனும் அதே பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தார். அவரை அழைத்து வருவதற்காக நான் அடிக்கடி அந்தப் பள்ளிக்குச் செல்வேன்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது விஜய் சார் நேரில் வந்து ஜேசன் சஞ்சயை அழைத்துச் செல்வார். சில சமயங்களில் டிரைவர் இல்லாமல் அவரே தனியாக வருவார். அப்படித்தான் ஒரு நாள் ஜேசனை அழைத்துச் செல்ல விஜய் சார் மட்டும் வந்திருந்தார்.

பொதுவாக பள்ளி வாட்ச்மேன் ஜேசனை காருக்குச் சென்று ஏற்றுவார். ஆனால், அந்த நாளில் விஜய் சாரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில், ஜேசன் சஞ்சயை நான் தூக்கிக்கொண்டு காரை நோக்கி ஓடினேன்.

காரின் கதவைத் திறந்து அவரை ஏற்றும்போது விஜய் சாரை நேரில் பார்த்தேன். என்னைப் பார்த்த அவர், ‘ஏன் இப்படி?’ என்பது போல சைகை செய்து சிரித்தபடி ‘பாய்’ சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்” என்று சிரித்தபடி நினைவுகூர்ந்தார்.

தற்போது, ஜேசன் சஞ்சய் பகிர்ந்த வீடியோவும், ஜெமினி மணி அளித்த இந்தப் பேட்டி வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago