திருவள்ளூர் மாவட்டம் பெரியப்பாளையம் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 13 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 21ஆம் தேதி ஏற்பட்ட இந்த விபத்தில் மொத்தம் 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பெண் தொழிலாளர்கள் தற்போது குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், “கணிகை பேர் பகுதியில் உள்ள இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் எமர்ஜென்சி மாஸ் கேஷுவாலிட்டி ஏற்பட்டது.
அதில் 44 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் 42 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குவர். பலர் மூச்சுத்திணறல், மயக்கம் மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற பாதிப்புகளுடன் வந்தனர். அனைவருக்கும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் அடிப்படையில் 13 பேர் முழுமையாக குணமடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்,” என்று தெரிவித்தார். மீதமுள்ள தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
