பெங்களூருவில் உள்ள தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் அவர்களது இளைய மகள் சுப்ரியா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இக்குற்றத்தைச் செய்தவர்கள், சோமசுந்தரின் மூத்த மகள் ஸ்வேதா, அவருடன் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் வசித்து வந்த அவரது காதலர் கென்னத் ஆகியோராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, கென்னத்துடனான ஸ்வேதாவின் உறவை அவரது பெற்றோர் எதிர்த்துள்ளனர். இந்த எதிர்ப்பே இந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கே.ஆர். புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீகஹள்ளி, தமானிக் லேஅவுட்டில் உள்ள ‘சாய் கிரீன்’ அடுக்குமாடி குடியிருப்பில் திங்களன்று இந்தக் கொடூரமான கொலைகள் நடந்துள்ளன.
கொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவையா? ஸ்வேதா, கென்னத் இருவரும் இணைந்து செயல்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கே.ஆர். புரம் போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஈஸ்ட் பாயிண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின் போது கூடுதல் விவரங்கள் தெரியவந்துள்ளன. குற்றம் சாட்டப்பட்ட ஸ்வேதா சுமார் ரூ. 30 லட்சம் வரை கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கடன் சுமை குறித்து அவரது பெற்றோர் அடிக்கடி கேள்வி எழுப்பியதால் குடும்பத்தில் மனக்கசப்பு, மோதல்கள் இருந்ததாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திங்களன்று ஸ்வேதாவும், கென்னத்தும் வீட்டிற்குச் சென்றபோது, வீட்டில் அவரது தாயார் முத்துலட்சுமி மட்டுமே இருந்ததாகப் போலீசார் கருதுகின்றனர். அப்போது அவரது தந்தை சோமசுந்தரும் இளைய மகள் சுப்ரியாவும் வெளியே சென்றிருந்தனர். ஸ்வேதா, கென்னத் மற்றும் முத்துலட்சுமி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த வாக்குவாதத்தின் போது, முத்துலட்சுமி அரிவாள் போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொலை நடந்த பிறகு, சோமசுந்தரும். சுப்ரியாவும் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்னதாகவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குளியலறையில் இருந்த ரத்தக்கறைகளைச் சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறையின் தகவலின்படி, சுப்ரியா வீட்டிற்குள் நுழைந்தபோது ஸ்வேதா அவரைப் பிடித்துக்கொள்ள, கென்னத் அந்த ஆயுதத்தால் அவரைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, அதே ஆயுதத்தைக் கொண்டு சோமசுந்தரும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த காயங்கள் ஏற்பட்ட போதிலும், அவர் வீட்டிலிருந்து வெளியே ஓடிச் சென்று உதவி கோர முடிந்ததாகத் தெரிகிறது பின்னர் அவர் உயிரிழந்தார்.
தலைமறைவாக உள்ள ஸ்வேதா கென்னத் ஆகியோரைக் கைது செய்ய காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இந்தக் கொலையின் உண்மையான நோக்கம், சம்பவங்கள் நடந்த விதம் ஆகியவை குறித்துச் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர், ஆனால் அது குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
