உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சில பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ரசாயனங்கள் இந்தியாவில் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அவற்றில் முக்கியமானவை பேராக்வாட் (Paraquat), கிளைபோசேட் (Glyphosate), 2,4-டைகுளோரோபினாக்ஸி அசிட்டிக் அமிலம் (2,4-Dichlorophenoxyacetic Acid), அசிபேட் (Acephate), மற்றும் டைமித்தோயேட் (Dimethoate) ஆகியவை ஆகும்.
உலகின் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பேராக்வாட், மிகவும் நச்சுத்தன்மை கொண்ட களைக்கொல்லி மருந்தாகக் கருதப்படுகிறது. இது நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கும், பார்க்கின்சன் நோய் அபாயத்திற்கும் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இது இன்னும் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அடுத்ததாக, உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்தான கிளைபோசேட் குறித்து சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆய்வு நிறுவனம் (IARC), இதை மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயனமாக வகைப்படுத்தியுள்ளது.
எனினும், சில நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகள் இதனை பாதுகாப்பானதாகக் கருதுகின்றன. இந்தியாவில் கிளைபோசேட்டை உற்பத்தி செய்யும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆண்டுதோறும் பெரும் வருவாய் ஈட்டி வருகின்றன.
2,4-டைகுளோரோபினாக்ஸி அசிட்டிக் அமிலம் எனப்படும் களைக்கொல்லி, வியட்நாம் போரில் பயன்படுத்தப்பட்ட ‘ஏஜென்ட் ஆரஞ்ச்’ கலவையின் ஒரு கூறாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கோதுமை, நெல், மக்காச்சோளம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதையும் உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆய்வு நிறுவனம், புற்றுநோய் அபாயம் கொண்ட ரசாயனமாக வகைப்படுத்தியுள்ளது.
டைமித்தோயேட் என்ற பூச்சிக்கொல்லி மருந்து சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இது டிஎன்ஏ பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் கவலைகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல், அசிபேட் (Acephate) என்ற பூச்சிக்கொல்லி மருந்து, தேனீக்கள் உள்ளிட்ட மகரந்தச் சேர்க்கை செய்யும் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் அசுவினி, ஜாசிட், திரிப்ஸ் மற்றும் வெள்ளை ஈ போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்த இந்த மருந்து இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்த செலவில் பயிர்களைப் பாதுகாக்க உதவுவதால், பல விவசாயிகள் இதை நம்பியுள்ளனர்.
இந்த ரசாயனங்கள் உணவுப் பயிர்களில் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் எச்சங்கள் உணவின் மூலம் மனித உடலுக்குள் செல்லக்கூடும் என்ற கவலைவும் எழுந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் கன உலோக எச்சங்கள் இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் நூற்றுக்கணக்கான இந்திய உணவுப் பொருட்களை நிராகரித்துள்ளது.
உலகின் பல நாடுகள் ஆபத்தானவை எனக் கருதி தடை செய்துள்ள அல்லது கட்டுப்படுத்தியுள்ள ரசாயனங்கள் ஏன் இன்னும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, இந்தியாவில் கடுமையான ஆய்வுகளும், ஒழுங்குமுறைகளும் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மறுபுறம், இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் விவசாயம் செய்வது கடினம் என்றும், அவற்றை உடனடியாக தடை செய்தால் விளைச்சல் குறையலாம், விவசாயிகளின் செலவுகள் அதிகரிக்கலாம் மற்றும் பூச்சி தாக்குதலால் பயிர்களுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் விவசாயத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் சில ரசாயனங்கள் இந்தியாவில் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவது, மக்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பாதுகாப்பான மாற்று வழிகளுக்கு படிப்படியாக மாறுவது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இந்திய விவசாயிகளின் தேவைகள், மக்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே எவ்வாறு சமநிலையை ஏற்படுத்துவது என்பது தற்போது முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.
ஆபத்தான ரசாயனங்களை உடனடியாக தடை செய்வதா அல்லது அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் படிப்படியாக பாதுகாப்பான மாற்றுகளுக்கு மாறுவதா என்பது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்திய மக்களின் உயிரும் உடல்நலமும் உலகின் எந்த நாட்டினரின் உயிருக்கும் சமமான மதிப்புடையது என்பதால், பாதுகாப்பான மற்றும் நிலையான விவசாய முறைகளுக்கு மெதுவாக மாறுவது காலத்தின் கட்டாயமாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
