அதிமுக எம்எல்ஏவாக இருந்த சி. விஜயபாஸ்கர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர், தனது தொகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து கருத்து கேட்பு நடத்தி வந்தார்.
இதனடிப்படையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, நேற்று அவர் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இதையடுத்து விராலிமலை சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றிய செயலாளர்களில் 18 பேரும், 8 நகர செயலாளர்களில் 6 பேரும் விஜயபாஸ்கர் அணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 40 மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
அதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கு சென்றாலும் அவருடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், அவர் வரும் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கட்சித் தலைவர் விஜய் தலைமையில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
