திருவனந்தபுரம் தம்பானூர் அரசு பேருந்து நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை இயக்கப்பட்ட பேருந்தில் முதல் இலவச பயணச் சீட்டை வழங்கி, பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை கேரள முதலமைச்சர் வீ.டி. சதீஷன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கேரளா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
திட்டத்தின் தொடக்க விழாவில், கேரளாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷீலா பேருந்தை இயக்கி நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் “விடியல் பயணம்” என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது கேரளாவிலும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, கேரள மாநிலத்தின் பல்வேறு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 3,125 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் வீ.டி. சதீஷன், “இந்தத் திட்டத்தை பெண்களுக்கான இலவச சேவையாக மட்டும் பார்க்கக் கூடாது. இது அவர்களுடைய உரிமையாகக் கருதப்பட வேண்டும்.
அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்வது பெண்களின் கௌரவத்தையும் சமூகப் பங்கேற்பையும் உயர்த்தும் நடவடிக்கையாகும்” என்று தெரிவித்தார்.
