தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது உட்கட்சிப் பூசல்கள், நிர்வாகிகளின் கட்சித் தாவல் எனப் பலமுனை நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார்.
அ.தி.மு.க-வை நெருக்கும் 7 முக்கியப் பிரச்சினைகள் இதுதான். அண்மையில் தஞ்சாவூரைச் சேர்ந்த மகேந்திரன் என்ற தீவிர அ.தி.மு.க தொண்டர், “கட்சி ஒன்றுபட வேண்டும், மீண்டும் ஜெயலலிதா அம்மா ஆட்சி அமைய வேண்டும்” என உருக்கமாக வீடியோ வெளியிட்டுத் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அடிமட்டத் தொண்டர்களின் உச்சகட்ட ஆதங்கத்தையும் குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளது.
10 ஆண்டுகள் வனவாசம்
2021-ல் 65 எம்.எல்.ஏ-க்களுடன் பலமாக இருந்த அ.தி.மு.க, 2026 தேர்தலில் வெறும் 47 இடங்களாகச் சுருங்கி, வரலாற்றிலேயே முதல்முறையாக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலை தொண்டர்களைச் சோர்வடையச் செய்துள்ளது.
உட்கட்சி முனகல்கள்- அவிழும் வேர்கள்
சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி முகாமில் அணிதிரண்டனர். தற்போது அவர்கள் சமரசம் ஆகியிருந்தாலும், உள்ளுக்குள் புகைச்சல் ஓயவில்லை.
த.வெ.க-வின் தூண்டிலில் மாஜிக்கள்
முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி அ.தி.மு.க மாஜிக்களும், மாவட்ட நிர்வாகிகளும் கொத்துக்கொத்தாகத் த.வெ.க-வை நோக்கித் தாவி வருவது எடப்பாடிக்கு மிகப்பெரிய பலவீனம்.
பொறி வைக்கும் அண்ணாமலை
மறுபுறம் பா.ஜ.க-வின் அண்ணாமலை தீவிரமாக அ.தி.மு.க ஓட்டு வங்கியை நோக்கி நகர்வதால், அ.தி.மு.க-வினர் அங்கும் சிதறிவிடக் கூடாது என்ற பதற்றம் நிலவுகிறது.
‘தி.மு.க – அ.தி.மு.க கூட்டு’ போலி பிம்பம்
“தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ரகசியக் கூட்டணி வைத்துள்ளன” என்ற கருத்துருவாக்கம் திட்டமிட்டுப் பரப்பப்படுவதால், அ.தி.மு.க தனது தனித்துவ அடையாளத்தை இழந்துவிடுமோ என்ற அச்சம் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.
கடன் சுமையில் தவிக்கும் மாஜிக்கள்
தேர்தலில் எப்படியும் வென்றுவிடலாம் என எடப்பாடி பழனிசாமியின் பேச்சை நம்பிக் கோடிக்கணக்கில் கடன் வாங்கிச் செலவு செய்த பல மாஜிக்கள், தற்போது வட்டி கட்ட முடியாமல் வீடுகளையும் நிலங்களையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, தங்களின் பொருளாதாரப் பாதுகாப்பிற்காக ஆளுங்கட்சிப் பக்கம் தஞ்சம் புகுகின்றனர்.
