https://republictn.com/

தமிழக அரசியல் களத்தில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அதிகாரிகள் நியமனம், பட்ஜெட் கூட்டத்தொடர் நெருங்கும் சூழலில், தி.மு.க மற்றும் த.வெ.க கூட்டணிகளுக்குள் நடக்கும் உட்கட்சி நகர்வுகள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

தி.மு.க கூட்டணியில் இருந்து பல கட்சிகள் விலகி ஆளுங்கட்சியான த.வெ.க பக்கம் சாய்வது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பலவீனமா அல்லது பலமா என்கிற விவாதம் எழுந்து வருகிறது. ‘கட்சித் தாவல் குற்றச்சாட்டின் கீழ் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்களில் 21 பேரைச் சபாநாயகர் மன்னித்துவிட்டதாகக் கூறினாலும், எஞ்சிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இது குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், “கட்சித் தாவல் சட்டத்தின்படி, சொந்தக் கட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்ட அன்றே அவர்கள் குற்றம் இழைத்துவிட்டனர். சபாநாயகர் 21 பேரை மன்னித்துவிட்டு 4 பேரை மன்னிக்க மாட்டேன் எனக் கூறுவது சட்ட முரண்பாடு. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே இந்த நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இல்லையா? என்பது தெரியும். ஆனால், விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதிக்கு நிச்சயமாக இடைத்தேர்தல் நடக்கும்.

த.வெ.க அமைச்சரவையில் கம்யூனிஸ்ட்கள்?
தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க-வை ஆதரிக்கும் சி.பி.ஐ கட்சி த.வெ.க அமைச்சரவையில் இடம் பெறலாம் என்ற எண்ணத்தில் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், சி.பி.எம் இன்னும் இது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை.

பிராக்டிகலாக தற்போது த.வெ.க அமைச்சரவை முழுமையாக இருப்பதால், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போதுதான் இவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கலாம். மறுபுறம், ம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டியிடாமல் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால், அவர்கள் சட்டப்படி தி.மு.க எம்.எல்.ஏ-க்களாகவே கருதப்படுவர். எனவே துரை வைகோ-வால் நேரடியாகத் த.வெ.க அமைச்சரவையில் பங்கெடுக்க முடியாத விசனம் அவர்களுக்குள் இருக்கிறது.

‘தனிச் சின்னம்’ என்ற எதார்த்த அரசியல்
தேர்தல் களத்தில் ‘தனிச் சின்னம்’ என்று பேசுவது வெறும் தம்பட்டம் மட்டுமே. எதார்த்தத்தில் உதயசூரியன் அல்லது இரட்டை இலை போன்ற பெரிய சின்னங்களுக்கு வேலை செய்வதுதான் தொண்டர்களுக்கு உற்சாகத்தைத் தரும். தீப்பட்டி போன்ற சுயேச்சை சின்னங்களை வாங்கிக் கொடுத்தால் களத்தில் வெல்வது மிகக் கடினம். ம.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இப்போது பெரிய வாக்கு வங்கி எதுவும் இல்லை. அவர்களின் காலம் முடிந்துவிட்டது.

தி.மு.க-வுக்குப் பலமா?
“தி.மு.க கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறி த.வெ.க பக்கம் போவது மு.க.ஸ்டாலினுக்குப் பலவீனமல்ல. அது தி.மு.க-வுக்குக் கிடைத்த நல்வாய்ப்பு.

அதற்கான காரணங்கள் இருக்கிறது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் த.வெ.க-விடம் மிகக் கடுமையான ‘டிமாண்ட்’ வைப்பார்கள். “இத்தனை மேயர் சீட் வேண்டும், அத்தனை நகராட்சித் தலைவர் பதவி வேண்டும்” என நிர்பந்திப்பார்கள்.

இந்த நிர்பந்தங்களுக்குப் பணிந்து த.வெ.க அவர்களுக்கு மேயர் பதவிகளை வாரி வழங்கினால், அது த.வெ.க-வின் சொந்த வளர்ச்சியை அடியோடு அழித்துவிடும். த.வெ.க-விற்கு உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளைத் தன் வசம் வைப்பதுதான் நல்லது. முன்பு தி.மு.க எப்படித் தெரிந்தே காங்கிரஸின் நிர்பந்தத்திற்குப் பணிந்து 28 சீட்டுகளைக் கொடுத்துப் பின்னடைவைச் சந்தித்ததோ, அதே போன்ற இக்கட்டான நிர்பந்தச் சூழல் இப்போது த.வெ.க-விற்கு உருவாகும்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தேவையில்லாத நிர்பந்த பாரங்கள் தி.மு.க-விடமிருந்து விலகி த.வெ.க தலைக்கு மாறுவதால், மு.க.ஸ்டாலின் தற்காலிகமாகத் தனித்து விடப்பட்டது போலத் தெரிந்தாலும், தேர்தல் களத்தில் இது தி.மு.க-விற்கே சாதகமாக முடியும்” என்கிறார் தராசு ஷியாம்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago