தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி லஞ்சப் புகார் விவகாரம், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனியார் கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை முடித்து வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம், சென்னை பெருங்களத்தூர் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அடுக்குமாடி கட்டிடத்துக்கு திட்ட அனுமதி அளிக்க ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு, இந்த புகாரின் அடிப்படையில், 2024-ம் ஆண்டு செப்டம்பரில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.
சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு, இன்று விசாரணைக்கு வந்தது. இன்று லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்துள்ள அறிக்கை மீது முடிவெடுத்த நீதிபதி மீண்டும் விசாரிக்க மறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முந்தைய திமுக அரசு முடித்து வைத்த இந்த வழக்கை தற்போதைய தவெக அரசு மீண்டும் விசாரிக்க முடிவு எடுத்துள்ளது
இந்த மறு உத்தரவின் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதால், இந்த விவகாரம் அ.தி.மு.க வட்டாரத்திலும் தமிழக அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s
