சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அறிவாலய அரசியல், முன்னெப்போதையும் விட இப்போது பயங்கர அனலாக தகிக்கிறது. கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத மாபெரும் சறுக்கல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அரசியலை விட்டே தற்காலிகமாக ஒதுங்கிவிடலாம் என்கிற மனநிலைக்குத் தள்ளியிருப்பதாகப் பேசப்படுகிறது. ஆனால், இந்தச் சூழலை மையமாக வைத்து திமுகவின் சீனியர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்குமிடையே அறிவாலயத்தின் நிழல் யுத்தமே வெடித்துள்ளதாகத் தெரிகிறது.
உதயநிதி ரசிக்கும் புது ரக அரசியல்
சட்டமன்றத்தில் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய்- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையே நேரடியாக அரங்கேறி வரும் அரசியல் மோதல்களும், காரசாரமான விவாதங்களும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. இந்த ‘விஜய் Vs உதய்’ என்கிற நேருக்கு நேர் அரசியலை உதயநிதி மிகவும் ரசிப்பதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அசாத்திய அந்தஸ்தையும், சட்டமன்றத்தில் தனக்குக் கிடைத்துள்ள இந்த முக்கியத்துவத்தையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க உதயநிதி தயாராக இல்லை. இதனால், இடைத்தேர்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று கட்சியின் சீனியர்கள் கொடுக்கும் அழுத்தத்தை உதயநிதி துளியும் விரும்பவில்லை என அறிவாலய வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
சீனியர்களின் தூபம்
இதற்கெல்லாம் பின்னால் திமுகவின் மிக முக்கிய சீனியர் தலைவர்களின் சுய அரசியல் கணக்குகளும் அடங்கியுள்ளன. உதயநிதியின் தலைமையில் அல்லது அவருக்குக் கீழ் சட்டமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சியாகச் செயலாற்றுவதை கட்சியின் சில மூத்த தலைவர்கள் மனப்பூர்வமாக ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாகவே, அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் சென்று, “நீங்கள் அவையில் இருந்தால் மட்டுமே அது ஆட்சிக்கு எதிரான கட்சியின் பலத்தைக் காட்டும். எனவே நீங்கள் கண்டிப்பாக இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்றத்திற்குள் வரவேண்டும்” எனத் தொடர்ந்து தூபம் போட்டு வருகின்றனர்.
தலைவரின் தேர்தல் அரசியல் சலிப்பு ஒருபுறம், ஜூனியரின் பிடிவாதம் மறுபுறம், சீனியர்களின் உள்ளடி வேலைகள் என திமுகவுக்குள் இப்போது முக்கோணப் போட்டி நிலவுகிறது.
