இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன், தவெக ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்ததன் பின்னணியில் எந்தக் கொள்கை அல்லது கோட்பாட்டு அடிப்படையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
“ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக மறைமுகமாக ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. தவெக கட்சியின் கொள்கைகளும், கோட்பாடுகளும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களுடன் ஒத்துப்போகின்றன என்று யாராவது கருதினால், அதில் உண்மையில்லை. அதற்கும் எங்களது ஆதரவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தாவெக 107 உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்தது. சட்டமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருந்த காரணத்தால், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரி கடிதம் வழங்கியது.
அதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆட்சி அமைக்க அனுமதி வழங்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.
சசிகலா விவகாரத்தின் போது காலதாமதம் ஏற்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வேறு ஆட்சி அமைக்கப்பட்டதைப் போல, தமிழ்நாட்டிலும் அதுபோன்ற ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு.
அத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாக ஆட்சி நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகிவிடக் கூடாது. அந்த முயற்சியை முறியடிக்கும் நோக்கத்தில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன. அதற்கு மேல் இதில் வேறு எந்தக் காரணமும் இல்லை.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் என்பது இப்போதுதான் அரசியல் களத்தில் உருவாகியுள்ள ஒரு புதிய இயக்கம் என்றும், இன்னும் ‘தொப்புள்கொடி கூட அறுபடாத குழந்தை’ போன்ற நிலையில்தான் இருப்பதாகவும் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
தவெக ஆட்சி எதிர்காலத்தில் வெற்றி பெறுமா, தோல்வியடையுமா என்பதை இப்போது தீர்மானிக்க முடியாது. காலப்போக்கில்தான் அதன் செயல்பாடுகளையும், ஆட்சித் திறனையும் மதிப்பிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இது நீண்டகால கொள்கைப் போராட்டங்கள், மக்கள் இயக்கங்கள் அல்லது கருத்தியல் அடிப்படையிலான அரசியல் வளர்ச்சியின் மூலம் உருவான ஆட்சி அல்ல என்றும், மாறாக ஒரு கவர்ச்சி அலையின் விளைவாக உருவான அரசியல் எழுச்சி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
முத்தரசனின் இந்த அதிரடி பேட்டி, தவெக அரசுக்கு இடதுசாரிகள் அளித்துள்ள ஆதரவு என்பது வெறும் சூழ்நிலை சார்ந்த அரசியல் நகர்வு (Strategic Support) மட்டுமே தவிர, அது எந்த வகையிலும் நிரந்தரமான கொள்கைக் கூட்டணியாக கருதப்படக் கூடாது என்பதைக் தெளிவாக உணர்த்துவதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்
