”அமித் ஷாவின் ஆசிர்வாதத்தால் அனுப்பப்பட்டுள்ள ஒரு மாயமான் தான் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக செல்வாக்கு இழந்துள்ளதால் லேபிள் மாற்றி தற்போது அண்ணாமலையை வைத்து கட்சி தொடங்கியுள்ளனர்” என கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
பெரியகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திராவிட கழக தலைவர் கி.வீரமணி, ”தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது அதனை சரி செய்ய முதலமைச்சர் அவகாசம் கேட்க கூடாது. பாஜகவின் கொள்கைக்கு மறு உருவமாக அண்ணாமலை கட்சி தொடங்கியுள்ளார். பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் அனுப்பப்பட்டு புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.
திடீரென்று சாட்டையால் அடித்துக் கொள்வார், விவசாயத்தை பார்க்கப் போகிறேன் என்று கூறுவார். அரசியலில் ஒதுங்கி விட்டேன் என்று பல நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஆனால், எதிலும் அவர் உறுதியாக இருந்ததில்லை. அமித் ஷாவின் ஆசிர்வாதத்தால் அனுப்பப்பட்டுள்ள ஒரு மாய மான் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக செல்வாக்கு இழந்துள்ளதால் லேபிள் மாற்றி தற்போது அண்ணாமலையை வைத்து கட்சி தொடங்கியுள்ளனர்.
பாஜகவில் இருந்த ஒரு பிரிவினர் அண்ணாமலையின் புதிய கட்சியில் இணைந்துள்ளனரே தவிர, இளைஞர்கள் யாரும் அவர் கட்சியில் இணையவில்லை. தவெக சட்ட ஒழுங்கை காரணம் காட்டி ஆட்சி அமைத்தனர். ஆனால், தற்போது சட்டம்- ஒழுங்கு நாளுக்கு நாள் சீர் கேட்டு வருகிறது. அதை சீர்செய்ய அவகாசம் கேட்ககூடாது.
முதலமைச்சர் விஜய் அப்போது கேள்வி கேட்கும் இடத்தில் இருந்தீர்கள். இப்போது பதில் சொல்லக்கூடிய இடத்தில் இருக்கும் நீங்கள் இப்போதும் கேள்விகளை கேட்டு இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
-த. முத்துவெளியப்பன், தேனி, சிறப்பு நிருபர்
