அண்ணாமலை பாஜக-வில் இருந்து விலகி சொந்த அரசியல் இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். அவர் ஒரு பிளவை மட்டும் ஏற்படுத்தவில்லை. மாறாக, சில வாரங்களுக்கு முன்புதான் தமிழகத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜயுடன் நேரடிப் போட்டிக்கான களத்தையும் அமைத்துள்ளார்.
இன்று தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய அண்ணாமலை, “எங்கள் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து ஒரு புதிய இயக்கமும், அரசியலில் ஒரு புதிய பரிமாணமும் தொடங்கவுள்ளது. நாம் தமிழகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியில் எனது கவனம் இருக்கும்” என்றும் தெரிவித்தார்.
விஜய் மற்றும் அவரது தவெக தங்கள் முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்ததுடன், பல்லாண்டு கால திராவிட ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன. ஒரு பிரபலமானவர், அரசியல் பின்னணி இல்லாதவர் தனது ரசிகர் பட்டாளத்தை வாக்குகளாக மாற்ற முடியும் என்பதை இது நிரூபித்தது. இந்நிலையில், பாரம்பரிய திராவிட ஆளுமைகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, மாநிலத்தின் அடுத்த அரசியல் சகாப்தத்தை யார் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற முக்கியமான கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இதுவரை இதற்கான விடை தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால், அண்ணாமலையின் வருகை அந்தச் சூழலை மாற்றியமைக்கிறது.
விஜய், அண்ணாமலை ஆகிய இருவருமே அரசியலுக்குள் வெளியாள்களாக நுழைந்ததால், அவர்களுக்கு இடையிலான ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், அவர்களின் அரசியல் பயணங்கள் முற்றிலும் மாறுபட்டவை. எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா போன்ற தலைவர்களை உருவாக்கிய மரபின் தொடர்ச்சியாக, பல்லாண்டுகளாக தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்த பிறகு விஜய் அரசியலில் நுழைந்தார்.
இதற்கு நேர்மாறாக, அண்ணாமலை பொதுச் சேவையின் மூலம் தனது பிம்பத்தை உருவாக்கிக்கொண்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் 2020-ல் பாஜகவில் இணைந்தார். விரைவிலேயே அக்கட்சியின் தென்னிந்திய முகங்களில் மிகவும் பிரபலமான ஒருவராக உயர்ந்தார். நீண்ட காலமாகத் தனது இருப்பை நிலைநிறுத்தப் போராடி வந்த தமிழகத்தில், பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க அவரது தீவிரமான திமுக-எதிர்ப்புப் பிரச்சாரங்கள், களப்பணிகள், சமூக ஊடகத் தொடர்புகள் பெரிதும் உதவின.
ஆனாலும், பாஜகவைப் பொறுத்தவரை, அதிமுகவுடனான கூட்டணியை மீண்டும் அமைப்பதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்ததே ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழகத்தில் கட்சியின் வியூகம், குறிப்பாக அதிமுகவை அரவணைத்துச் செல்லும் அணுகுமுறை தொடர்பாக, மத்திய தலைமையுடன் அண்ணாமலைக்கு கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருந்தன. மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதும், பாஜக மீண்டும் கூட்டணி அரசியலைத் தேர்ந்தெடுத்ததும் அந்த இடைவெளியை மேலும் அதிகரித்தன.
அதிமுக மீதான தனது அதிருப்தியை அண்ணாமலை மறைக்க முயற்சிக்கவில்லை. கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு அவர் எழுதிய ஐந்து பக்கக் கடிதத்தில், கட்சியில் தான் ஓரங்கட்டப்பட்டதாகக் குறிப்பிட்டதுடன், 2024 மக்களவைத் தேர்தலில் 11 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி, முந்தைய சட்டமன்றத் தேர்தலில் 3 சதவீதமாகக் குறைந்ததையும் சுட்டிக்காட்டினார். இந்தச் சரிவுக்குக் கட்சியின் தவறான முடிவுகளும், அதிமுகவுடனான தொடர் கூட்டணியுமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
அண்ணாமலைக்குக் கூடுதல் சுதந்திரம் தேவைப்பட்டதாகவும், குறிப்பாக நடிகர் விஜய்யின் அரசியல் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வரும் சூழலில், ஏற்கனவே நிலைபெற்றுள்ள திராவிடக் கட்சிகளைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாகத் தமிழகத்திற்கு ஒரு புதிய அரசியல் களம் தேவை என்று அவர் கருதியதாகவும் நம்பப்படுகிறது.
பாஜக உயர்மட்டத் தலைவர்களுடனான ஆலோசனையின்போது, ”இன்று விஜய்யை எதிர்த்துப் போராட எந்தத் தலைவரும் இல்லை. திராவிடக் காலக்கட்டம் முடிந்துவிட்டது. மொழிப் பிரச்சினைகளை மட்டுமே மையமாகக் கொண்ட அரசியல் இனி எடுபடாது. மாநிலத்தின் அரசியல் சூழல் மாறிவிட்டது,” என்று அண்ணாமலை தெரிவித்ததாக, கூறப்படுகிறது.
நவீன தமிழகத்தில் பல்லாண்டுகளாக எந்தப் புதிய கட்சியாலும் சாதிக்க முடியாத ஒன்றை டிவிகே சாதித்தது. அது தனது பிரபலத்தை அரசியல் அதிகாரமாக மாற்றியது. இந்த வெற்றி விஜய்யை ஒரு நடிகர்-அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து மாநிலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் ஆளுமையாக மாற்றியது.
அந்த வெற்றி எதிர்க்கட்சித் தரப்பில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதிமுக தன்னை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அண்ணாமலையின் வெளியேற்றத்திற்குப் பிறகு மாநிலத்தில் பாஜகவின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அதேவேளையில், காங்கிரஸுக்கும் இன்னும் ஒரு வலுவான சுயமான அடித்தளம் அமையவில்லை.
எனவே, புதிதாகக் களமிறங்கும் எந்தவொரு கட்சியும் ஒரு கேள்விக்கு விடையளிக்க வேண்டியுள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்கு தமிழகத்தின் ஆதிக்க அரசியல் சக்தியாக விஜய் உருவெடுப்பதை அக் கட்சியால் தடுக்க முடியுமா? அண்ணாமலையால் உண்மையில் விஜய்யை எதிர்கொள்ள முடியுமா?
அண்ணாமலை அப்படி செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் மூன்று காரணங்கள் உள்ளன. 1. அவருக்கு ஏற்கனவே ஒரு அரசியல் அடித்தளம் உள்ளது. புதிய கட்சியைத் தொடங்கிய பெரும்பாலானோரைப் போலல்லாமல், அண்ணாமலை பூஜ்ஜியத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கவில்லை. பாஜகவில் அவர் பணியாற்றிய ஆண்டுகள் அவருக்கு மாநிலம் தழுவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. குறிப்பாக இளைஞர்கள், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், பாரம்பரிய திராவிட அரசியலுக்கு மாற்றை விரும்பும் பிரிவினரிடையே அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவின் அமைப்பு ரீதியான பலத்தை விட, அவரது தனிப்பட்ட செல்வாக்கு பல சமயங்களில் அதிகமாக இருந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியுள்ளனர்.
2.விஜய்யின் ஈர்ப்பு பரவலானது, அவரது ஆளுமையைச் சார்ந்தது. அண்ணாமலையின் அரசியல் அணுகுமுறை நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, நிர்வாகச் சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, விஜய்யை ரசித்தாலும், பிரபலங்கள் தலைமையிலான அரசியலில் முழுமையாக உடன்படாத வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்க்க அவருக்கு உதவக்கூடும்.
3.தமிழகத்தில் பாஜக மீது வைக்கப்படும் ஒரு முக்கிய விமர்சனம், அது டெல்லியால் இயக்கப்படும் கட்சி என்ற பிம்பம் நிலவுவதாகும். தற்போது அண்ணாமலை தனியாக ஒரு இயக்கத்தைத் தொடங்கினால், அது தமிழகத்தின் பிராந்திய அடையாளத்தையும் தேசிய கண்ணோட்டத்தையும் இணைக்கும் முயற்சியாக அமையலாம். இந்த மாதிரியான அணுகுமுறையை அவர் ஏற்கனவே பரிசீலித்து வருகிறார்.
ஆனாலும், அண்ணாமலைக்கான பாதை எளிதானதாக இருக்காது. விஜய்யிடம் ஒரு விஷயம் உள்ளது. ஆனால் அது தற்போது அண்ணாமலையிடம் இல்லை. அதுதான் கடந்த முப்பது ஆண்டுகளாக திரைப்படத் துறையில் அவர் கட்டமைத்துள்ள மக்களுடனான உணர்வுபூர்வமான பிணைப்பு. தனிப்பட்ட ஈர்ப்புத் திறன் மட்டும் போதாது என்பதைத் தமிழக அரசியல் வரலாறு காட்டுகிறது. ஆனால், ஆழமான கலாச்சாரத் தாக்கத்தை ஏற்படுத்திய ஈர்ப்புமிக்க தலைவர்கள் ஒரு தனித்துவமான சாதகமான நிலையைப் பெறுகிறார்கள்.
கட்சியிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு தலைவரும் எதிர்கொள்ளும் வழக்கமான சவாலையும் அண்ணாமலை எதிர்கொள்கிறார். அதாவது, பூஜ்ஜியத்திலிருந்து ஒரு வேகத்தை அல்லது எழுச்சியை உருவாக்க வேண்டிய நிலை. பாஜக அவருக்குத் தொண்டர்கள், உள்கட்டமைப்பு, தேர்தல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கியிருந்தது. அதைத் தனித்து நின்று மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினமான காரியம்.
அண்ணாமலையின் கதை பாஜகவைப் பொறுத்தவரை “ஒருவேளை இப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்ற வகையிலான ஒன்றாக மாறி வருகிறது. அதாவது, பெரும் ஆற்றல் கொண்ட ஒரு தலைவர், தான் விரும்பிய அரசியல் வெளியை முழுமையாகப் பெற முடியாமல் போன நிலை. இப்போதுள்ள கேள்வி என்னவென்றால், அந்தக் கட்சிச் சூழலுக்கு வெளியே அந்தத் திறனும் ஆற்றலும் நிலைத்திருக்குமா என்பதுதான்.
இரு தரப்பு ஆதரவாளர்களும் ஏற்கனவே எம்ஜிஆர் மற்றும்கருணாநிதிக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டித்தன்மையுடன் இவர்களை ஒப்பிடத் தொடங்கிவிட்டனர். விஜய்யையும் அண்ணாமலையையும் தமிழகத்தின் எதிர்காலத்திற்கான இரண்டு வெவ்வேறு தொலைநோக்குப் பார்வைகளின் பிரதிநிதிகளாகச் சித்தரிக்கின்றனர்.
அந்த ஒப்பீடு ஒருவேளை முன்கூட்டியே செய்யப்பட்டதாக இருக்கலாம். தற்போதைய நிலையில், ஏற்கனவே ஆட்சியைப் பிடித்திருந்த விஜய் ஒரு நிலைபெற்ற சக்தியாகத் திகழ்கிறார். அண்ணாமலை, புதிய கட்சியைத் தொடங்கினாலும், ஒரு சவாலளிக்கும் போட்டியாளராகவே இருப்பார்.
ஆனால் 2026-க்குப் பிந்தைய தமிழக அரசியல் ஒரு குறிப்பிட்ட போட்டியால் வரையறுக்கப்படுமானால், அது இனி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான போட்டியாக இருக்காது. அது விஜய்- அண்ணாமலைக்கு இடையிலான போட்டியாக அமையக்கூடும். அரசியலில் வெற்றிகண்ட விஜய்- அதை மாற்றி எழுத முயலும் அண்ணாமலை இருவருக்கும் இனி போட்டி அதிகமாக இருக்கலாம்.
