பிரிவு அதிகாரப்பூர்வமாகிவிட்டது. தமிழகத்தில் பாஜகவின் மிகவும் அறியப்பட்ட முகமான அண்ணாமலை, பல நாட்களாக நீடித்திருந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
“பாஜகவின் தேசியத் தலைவர் மாண்புமிகு நிதின் நபின், தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலக அளித்துள்ள ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்,” என்று பாஜக இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, சமூக ஊடகங்கள் வாயிலாக மதியம் பொதுமக்களுடன் “வெளிப்படையான, மனதிறந்த உரையாடலை” நடத்தவிருந்த சில மணிநேரங்களுக்கு முன்பாகவே அறிவித்துள்ளது. 42 வயதான அண்ணாமலை டெல்லிக்குச் சென்று, கட்சியின் தலைவர் நிதின் நபின்னைச் சந்தித்து, “இணக்கமான சூழலில்” இந்த உறவை முடித்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அமித் ஷா, பி.எல். சந்தோஷ் ஆகியோருடனான சந்திப்பும் நடைபெற்றது.
அதன்பின் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அண்ணாமலைக்குப் பிறகு தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் நேற்று டெல்லிக்கு அழைக்கப்பட்டார். மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இறுதியில் இன்று அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ராஜினாமா குறித்த கேள்விக்கு பதிலளித்த மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “பாஜகவுக்கு எந்த இழப்பும் இல்லை. பாஜக உலகின் ஒரு பெரிய கட்சி” என்று கூறினார். ஆனால், ஆந்திரப் பிரதேச பாஜக தலைவரின் நிலைப்பாடு கொஞ்சம் மாறுபட்டதாக இருந்தது. எதிர்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் அண்ணாமலை மீண்டும் கட்சிக்குத் திரும்புவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“அண்ணாமலை எங்கள் கட்சியின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். இது ஒரு சிறிய பின்னடைவுதான். அவர் நிச்சயமாகத் திரும்பி வருவார் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ்நாட்டில் அவர் மேற்கொண்ட செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, வரும் நாட்களில் அவர் மீண்டும் வந்து கட்சியில் பங்கேற்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று ஆந்திரப் பிரதேச பாஜக தலைவர் பி.வி.என். மாதவ் கூறியுள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தில், “தேசியக் கட்சிகள் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் பேசியதில்லை” என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
ஜூன் 2-ஆம் தேதியிட்ட தனது கடிதத்தில், “இந்த நம்பிக்கையை மாற்ற நான் முயற்சித்தேன். உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பல தடைகள், இடையூறுகள் இருந்தபோதிலும் ஓரளவு வெற்றியும் கண்டேன்,” என்று கூறிய அண்ணாமலை, பாஜகவின் மூத்த தலைவர்கள் அளித்த உறுதியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதற்கு முந்தைய 18 மாதங்களாகவே, பாஜகவின் உயர்மட்டத் தலைமையிடம் தனது “கருத்து வேறுபாடுகளை” வெளிப்படுத்தி வந்ததாகப் பதவியிலிருந்து விலகிய அண்ணாமலை கூறினார்.
“தமிழகத்தில் வளர்ச்சி, கலாச்சார வேர்களை அடிப்படையாகக் கொண்ட அரசியலை முன்னெடுப்பது குறித்த எனது தொடர்ச்சியான சிந்தனைகளால், உயர்மட்டத் தலைவர்களுக்கு மேலும் சுமையை ஏற்ற நான் விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலுக்குப் பிறகு, தமிழகம் தொடர்பான விஷயங்களில் எங்கள் கருத்துகள் ஒத்துப்போகவில்லை என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்” என்று அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, கட்சியிலிருந்து விலகி, நான் அரசியலுக்கு வந்ததற்கான உண்மையான நோக்கத்தை மறுபரிசீலனை செய்யவும், எதிர்காலத்தில் காலம் காட்டும் திசையில் பயணிக்கவும் இதுவே சரியான தருணம் என்று நான் கருதுகிறேன்,” என்றும் அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் இளம் தலைவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களைச் சிறந்த தலைவர்களாக உருவாக்கும் நோக்கிலான ஒரு மக்கள் இயக்கத்தைத் தொடங்குவதற்கான திட்டங்களில் அவர் ஈடுபட்டு வருவதாக அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இயக்கம் காலப்போக்கில் ஒரு அரசியல் கட்சியாகவும் மாறக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர் ஏற்கனவே “We The Leaders” என்ற பெயரில் இலாப நோக்கற்ற தலைமைத்துவ முன்னெடுப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இது அவரது விரிவான அரசியல் திட்டத்திற்கு அடித்தளமாக அமையக்கூடும்.
பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான அண்ணாமலை, 2020-ஆம் ஆண்டில் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். சில வாரங்களிலேயே அவர் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு, பாஜக அவரை மாநிலத் தலைவராக உயர்த்தியது; அப்போது அவருக்கு வயது 37.
2023 கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலின்போது அவரைத் தேர்தல் இணைப் பொறுப்பாளராகவும் கட்சி நியமித்த நிலையில், அவரது செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்தது. ஆணாலும், அத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவுடனான கூட்டணியை பாஜக மீண்டும் அமைத்ததைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
தனது அரசியல் தளத்தை விரிவுபடுத்த பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அண்ணாமலை விரும்பியதாகவும், ஆனால் மத்தியத் தலைமை வேறு திட்டங்களைக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியை மீண்டும் அமைப்பதற்கான நிபந்தனையாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மாற்றத்தை வலியுறுத்தியதாகக் கூறப்படும் நிலையில், மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டது அந்த ஏற்பாட்டின் ஒரு பகுதியாகவே அரசியல் நோக்கர்களால் பரவலாகப் பார்க்கப்பட்டது.
அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெறவில்லை. தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியையும் மக்கள் மத்தியில் அக்கட்சியின் தெரிவுநிலையையும் உயர்த்திய பெருமை அவருக்கு இருந்தாலும், இதுவரை அவருக்கு எந்தத் தேர்தல் வெற்றியும் கிடைக்கவில்லை. அவர் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 2024 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
