தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னும் அரசியல் களம், யாரும் எதிர்பார்க்காத அதிரடித் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தல் வரை திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கம்யூனிஸ்டுகள், விசிக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள், தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைக்கக் கூட்டணி தாவியதை திமுக தலைமை இன்னும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறது.
மற்றொரு புறம், தனித்து நின்று கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தாலும், காரைக்குடியில் சீமான் தோற்றது நாம் தமிழர் கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பு வரை விஜய்யை விமர்சித்து வந்த சீமானின் அரசியல் பாதை, இப்போது புதிய திசை நோக்கித் திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சீமானுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தபோது, திமுக-வின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ‘தாய்மாமன் சீர்’ கொண்டு சென்றது வெறும் குடும்ப நிகழ்வாக மட்டும் பார்க்கப்படவில்லை. தவெக-வின் அசுர வளர்ச்சியைத் தடுக்க, நாம் தமிழர் கட்சியுடன் திமுக கைகோர்க்கப் போடுவதற்கான அச்சாரமாகவே அரசியல் விமர்சகர்களால் இது உற்று நோக்கப்பட்டது.
இந்த சூழலில் தான், தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதி ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற இசக்கி சுப்பையா தற்போதைய நிலைஅதிமுக உட்கட்சிப் பிளவால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையாவையே மீண்டும் தவெக வேட்பாளராக நிறுத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். தவெக-வின் இந்த பலமான நகர்வை உடைக்க, திமுக -அதிமுக ஆகிய இரு துருவங்களும் கரம் கோர்க்கத் துணிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானைப் “பொது வேட்பாளராக” களம் இறக்க இரு கட்சிகளும் திரைமறைவில் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.சட்டமன்றத்திற்குள் சீமான் நுழைந்தால், அது விஜய்யின் அமைச்சரவைக்குக் கடுமையான குடைச்சலாக இருக்கும் என்பதும், கேள்விகளால் தவெக-வைத் துளைத்தெடுக்க சீமானே சரியான நபர் என்பதும் திராவிடக் கட்சிகளின் கணக்கு. இந்த வியூகம் நிஜமானால், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் தமிழக அரசியலின் ஆகச்சிறந்த விறுவிறுப்பான போர்க்களமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை
