சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், “ஜென்சி திமுக” என்ற தலைப்பில் இளம் தலைமுறையினருக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட இளம் தலைமுறையினர் கலந்து கொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திராவிடம், பெரியாரியம், அண்ணா, கலைஞர் ஆகிய கொள்கை அடிப்படைகளில் திமுக சார்பு நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இளம் தலைமுறையினரின் பங்கேற்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் இளம் பேச்சாளர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். “வீடுகளில் திமுக” என்ற தலைப்பில் ராஜேஸ்வரி உரையாற்றுகிறார். “சமூக வலைதளங்களில் களமாடுவோம்” என்ற தலைப்பில் யாசர் அரபாத் பேசுகிறார். “ஏழை யுகத்தில் இன்றைய அரசியல்” என்ற தலைப்பில் சையது முபாரக் உரையாற்றுகிறார்.
அதேபோல், “மீண்டும் வருவோம், மீண்டும் வருவோம்” என்ற தலைப்பில் அன்பானந்தம் அரியப்பன் பேசுகிறார். “உடன்பிறப்புகளே, உங்களைதான்” என்ற தலைப்பில் ஏமந்த் உரையாற்றுகிறார். மேலும் “கொள்கையா? மாயையா?” என்ற தலைப்பில் வெற்றிசெல்வன் சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த நிகழ்வில் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச உள்ளார். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு எதிராக சட்டரீதியான பாதுகாப்பு, திமுக ஆதரவாளர்களின் கருத்துரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது, குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் அரசியல் உரையாடலை உருவாக்குவது உள்ளிட்ட கருத்துகள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக எடுத்துரைக்கப்படுகின்றன.
அரசியல் சூழல் மாற்றம் மற்றும் இளைஞர்களை கவரும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த “ஜென்சி திமுக” சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
