https://republictn.com/

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்ட விவகாரத்தில், அரசு அதிகாரிகள் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மழையைச் சாதகமாக பயன்படுத்தி, இரவோடு இரவாக தகரத் தகடுகளை அகற்றி சிலையைத் திறந்துவிடுங்கள். அதிகாரப்பூர்வ உத்தரவு வழங்க முடியாது” என்று அந்த ஆடியோவில் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆடியோவில் பேசுபவர், அப்பகுதியின் வருவாய் ஆய்வாளர் (RI) ஜெயா என்றும், தாசில்தார் காத்தமுத்து அல்லது கிராம நிர்வாக அலுவலர் (VAO) என்றும் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத்தன்மை குறித்து மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஒதியத்தூர் கிராமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. ஆனால், சிலையின் வடிவமைப்பு மற்றும் இடம் தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்தச் சிலை பல ஆண்டுகளாக தகரத் தகடுகளால் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தகரத் தகடுகள் அகற்றப்பட்டு சிலை திறக்கப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் மீண்டும் சிலையை தகரத் தகடுகளால் மூடினர்.

மீண்டும் சிலை மூடப்பட்டதை எதிர்த்து மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அது இருதரப்பு மோதலாகவும் கல்வீச்சு சம்பவமாகவும் மாறியது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதில் மூன்று போலீசார் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது அம்பேத்கர் சிலை மட்டுமல்லாமல், அதே பகுதியில் உள்ள காமராஜர் மற்றும் ராஜீவ் காந்தி சிலைகளும் தகரத் தகடுகளால் மூடப்பட்டுள்ளன.

கிராமத்தில் மீண்டும் பதற்றம் ஏற்படாமல் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போலீசார் மூன்று ஷிப்ட்களாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் வெளியாகியுள்ள ஆடியோவில், “இரவு 2 முதல் 3 மணிக்குள், மழை பெய்யும் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் தகரத் தகடுகளை அகற்றிவிடுங்கள். வேலை முடிந்த பிறகு ஏற்படும் பிரச்சினைகளைப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், வேலை முடியும் வரை யாருக்கும் தெரியக் கூடாது” என்று கூறப்படுவதாகக் கேட்கப்படுகிறது.

மேலும், “அதிகாரப்பூர்வமாக உத்தரவு வழங்க முடியாது. ஆனால், நீங்கள் அமைதியாக செய்து முடித்துவிட்டால், அதன் பிறகு ஏற்படும் சூழ்நிலையை சமாளிக்கலாம்” என்றும் அந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அரசு அதிகாரிகளே சட்டத்திற்கு புறம்பாக சிலையைத் திறக்கத் தூண்டினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த ஆடியோ மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆடியோவில் இடம்பெற்றுள்ள குரல்கள் உண்மையில் அரசு அதிகாரிகளுடையதா, அதன் பின்னணி என்ன என்பது குறித்து வருவாய்த் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சமூக விரோத கும்பல்களுக்குப் பயந்து அம்பேத்கர் சிலையை மூடுவதும், போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள்மீது தடியடி நடத்தியதும் கண்டிக்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஆகியவை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அரசு அதிகாரிகள் பேசியதாகக் கூறப்படும் இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, ஒதியத்தூர் அம்பேத்கர் சிலை விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அரசியல் மற்றும் சமூக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago