https://republictn.com/

முதலமைச்சர் விஜய் தனது இரண்டு நாள் அரசுமுறை பயணத்தை டெல்லியில் நிறைவு செய்து இன்று சென்னை திரும்பியுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் கூட்டணி கட்சி தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவில்லை என்றும், செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்றும் பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் ஜூன் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் மீண்டும் டெல்லி செல்ல உள்ளார். அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கும் அந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜயின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவர் சந்திப்பார் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சந்திப்புக்குப் பிறகு, இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழகத்தில் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்களையும் முதலமைச்சர் விஜய் சந்திப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற இரண்டு நாள் அரசுமுறை பயணத்தின் போது, பிரதமர் மற்றும் நிதியமைச்சரை மட்டும் சந்தித்தது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றாகும் என்றும், காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு அப்போது இறுதி செய்யப்படவில்லை என்றும், தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த பயணத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்காமல் திரும்பியதால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. டெல்லி பயணங்களின் போது தமிழக முதலமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து, பயணத்தின் முக்கியத்துவத்தை தேசிய ஊடகங்களுக்கு விளக்குவது வழக்கமான மரபாகும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த பயணத்தில் அந்த மரபு பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்திப்பது, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் சந்திப்பு, இடதுசாரி கட்சி தலைவர்களுடன் சந்திப்பு ஆகியவை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதனால், அடுத்த டெல்லி பயணத்தின் போது எழுந்துள்ள அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago