வட அமெரிக்க விளையாட்டுத்துறையையே அதிரவைக்கும் ஒரு இமாலயச் சதி அம்பலமாகி உள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, தெருக் கும்பல்கள், மேட்ச் ஃபிக்சிங் கூட்டாளிகள் இணைந்து ‘கிரிக்கெட் கனடா’ அமைப்பையே முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. இது வெறும் நிதி முறைகேடு அல்ல; கிரிக்கெட் மூலம் ஈட்டப்படும் லாபம், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள், காலிஸ்தான் பயங்கரவாதத்திற்குத் திட்டமிட்டுத் திருப்பி விடப்படுகிறது என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள பகீர் உண்மை.
இந்தச் சதிவலையின் மையப்புள்ளியாக ஐஎஸ்ஐ முகவர் பிலால் சீமா செயல்படுகிறார். இவர் தனது ஐஎஸ்ஐ கையாளுபவர்களின் உத்தரவின் பேரில், தனது மாமா அம்ஜத் பாஜ்வாவை கனடா கிரிக்கெட் வாரியத் தலைவராக்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் நிதியைத் திசைதிருப்புவது, பாகிஸ்தானில் இருந்து ஊழல் வீரர்களை இறக்குமதி செய்வது போன்ற உத்திகள் அரங்கேறியுள்ளன. இந்தச் சட்டவிரோத லாபங்கள், முன்னாள் சிஇஓ சல்மான் கானின் நிதிகளுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கிரிக்கெட் வாரியத்தின் மீதான தங்களது பிடியைத் தக்கவைக்க, கொடூரமான தெற்காசியக் குற்றக் கும்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கல்கரியில் சட்ட விவகாரங்களைக் கவனித்த வாரிய உறுப்பினர் ஒருவரின் வீடு இருமுறை சுடப்பட்டதால், பயத்தில் அவர் ராஜினாமா செய்தார். மே 2026-ல், சர்ரே நகரின் கிரிக்கெட் தலைவர் அர்விந்தர் கோசாவின் இல்லத்தில் பணம் பறிக்கும் நோக்கில் பயங்கரமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த முறைகேடுகள் எல்லை மீறியதைத் தொடர்ந்து, ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு கிரிக்கெட் கனடா மீது அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, டி20 உலகக் கோப்பையில் கனடா – நியூசிலாந்து இடையே நடந்த ஆட்டத்தில் ‘ஸ்பாட் ஃபிக்சிங்’ நடந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மக்களை ஒன்றிணைக்க வேண்டிய கிரிக்கெட் விளையாட்டு, பாகிஸ்தானிய ஏஜெண்டுகளால் நாடுகடந்த பயங்கரவாதத்திற்கான பணப்பரிமாற்ற மையமாக மாற்றப்பட்டிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
