https://republictn.com/

சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அசுதோஷ் கோவாரிகர் நடித்துள்ள ‘சிஸ்டம்’ திரைப்படத்தை அஸ்வினி திவாரி இயக்கியுள்ளார். இப்படம் மே 22ஆம் தேதி Amazon Prime OTT தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

இப்படம் தொடர்பான ஒரு பேட்டியில், “மீண்டும் எப்போது தமிழ் படங்களில் நடிப்பீர்கள்?” என்று ஜோதிகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

“சரியான கதைகள் வருவதற்காக நான் காத்திருக்கிறேன். இதற்கு முன்பு பல அழுத்தமான மற்றும் பெண் மையக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். அரசு பள்ளி ஆசிரியை முதல் வழக்கறிஞர் வரை பல்வேறு வேடங்களில் நடித்துவிட்டேன். குடும்பத் தலைவியாகவும் பல விதமான கதாபாத்திரங்களை செய்திருக்கிறேன்.

இப்போது நான் புதுமையான, வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அதற்காக இரண்டு வருடங்கள் கூட காத்திருக்க நான் தயாராக இருக்கிறேன்.

மம்முட்டி சாருடன் ஒரு மலையாளப் படத்தில் நடித்தேன். அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை என்னை மிகவும் கவர்ந்தது. அமைதியானதாய் இருந்தாலும் மிகவும் வலிமையான பாத்திரம் அது. அதுபோன்ற வித்தியாசமான வேடங்களில்தான் நடிக்க விரும்புகிறேன்.

இல்லையெனில் அது சலிப்பை ஏற்படுத்திவிடும். எனக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் கூட. அவர்கள் என்னை கடந்த 30 ஆண்டுகளாக பார்த்து வருகிறார்கள். நான் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை மீண்டும் மீண்டும் செய்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

இதுவரை நான் பெரும்பாலும் நல்ல மனிதராக, நல்ல விஷயங்களை மட்டுமே செய்யும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வருகிறது.

இப்போது பார்வையாளர்களும் மிகவும் மேம்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பல மொழிப் படங்களைப் பார்த்து வருகிறார்கள். நானும் அதை என் நடிப்பின் அடுத்த கட்டமாக பார்க்கிறேன். இப்படியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் சூர்யா மிகவும் ஆதரவாக இருக்கிறார்.

ஆனால் நான் எதிர்பார்க்கும் வகையான கதாபாத்திரங்கள் தென்னிந்திய சினிமாவில் அதிகமாக எழுதப்படுவதில்லை. பெண்களின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். ஏனெனில் நிஜ வாழ்க்கையில் பெண்கள் பல பரிமாணங்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

எனவே இது தமிழ் படமா, இந்தி படமா என்பது முக்கியமல்ல. குஜராத்தி படம் இருந்தாலும், அந்தக் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருக்க வேண்டும். ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யவோ, ஒரே மாதிரியான உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்தவோ எனக்கு விருப்பமில்லை,” என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 hours ago at 18 hours ago