எங்கள் துறையைச் சேர்ந்தவருக்கு தமிழக மக்கள் முதலமைச்சர் பதவி வழங்கியிருந்தது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. ஆனால், அவருக்கு பெரிய அளவில் அனுபவம் இல்லை என்பதால் பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. அனுபவம் இல்லாதவர்கள் எப்படி நிர்வாகத்தை நடத்துவார்கள்? என்ற சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டன.
ஆனால், அனுபவமற்றவர்கள் என்றாலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையும் அப்போது இருந்தது. அந்த தேர்தல் காலத்தில் நானும் என் நண்பரும் ஒரு விழாவில் சந்தித்து இதுகுறித்து பேசினோம். அப்போது என் நண்பர், என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை என்று கேட்டார். அதற்கு நான், என்னமோ ஒன்று நடக்கப் போகிறது என்பது மட்டும் தான் தெரிகிறது என்று கூறினேன்.
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜயை சந்தித்து நான் ஒரு கதையை கூறிய அனுபவமும் உண்டு. அந்த கதையின் தலைப்பு ‘புரட்சி’. அந்தக் கதையை கேட்ட பிறகு அவர் என்னுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் “இப்போது இந்த கதையை செய்ய வேண்டாம், கொஞ்சம் காத்திருக்கலாம்” என்று கூறினார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் இருந்து விலகி மக்கள் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.
அந்த நேரத்தில் திரையுலகில் இருந்த பலரும் மௌனமாக இருந்தனர். என்ன நடக்கும் என்ற குழப்பமும் இருந்தது. ஆனால் நான் அப்போது ஒரு கருத்தை உறுதியாக பதிவு செய்தேன். திரையுலகின் உச்ச நட்சத்திரம் மக்கள் பணிக்காக வந்தால் மக்கள் அவரை ஒருபோதும் கைவிடமாட்டார்கள் என்று கூறினேன்.
மக்கள் பணம், ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளைத் தாண்டி தீர்மானிக்கக் கூடியவர்கள். மக்கள் அறிவில்லாதவர்கள் அல்ல; அவர்கள் மிகுந்த அறிவுடையவர்கள். காசு வாங்கிக்கொண்டு காசே கொடுக்காமல் வாக்களித்தாலும், அது அவர்களின் அறிவின் வெளிப்பாடே என அந்த சூழலில் நான் கூறியிருந்தேன்.
