தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாக உள்ளன. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித் தேர்வர்களும் எழுதியிருந்தனர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட்டன. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திட்டமிட்டபடி இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் dg.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித்துறையின் மொபைல் செயலி மற்றும் டிஜிலாக்கர் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பள்ளிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்களுக்கு மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
