சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை அரசு அதிகாரி ஒருவர் பதிவு செய்ததாக தகவல்கள் பரவியதால் சர்ச்சையும் எழுந்துள்ளது.
தமிழக முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தினமும் தலைமைச் செயலகத்தில் அவரை சந்தித்து வருகின்றனர்.
முதலமைச்சர் தினமும் காலை முதலே தலைமைச் செயலகத்திற்கு வந்து, மாலை வரை பொதுமக்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார்.
அந்த வகையில், இன்று மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் கோரிக்கைகளை கேட்டறிய முதலமைச்சர் விஜய் நேரில் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரும், கடந்த ஆட்சிக்காலங்களில் நிறைவேறாத கோரிக்கைகள் குறித்து விளக்கி, புதிய அரசு அவற்றை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்றிருந்த மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர், முதலமைச்சருடன் நடைபெற்ற உரையாடலை தனது செல்போனில் பதிவு செய்து ரீல்ஸாக சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த வீடியோவை அரசு அதிகாரி ஒருவர் பதிவு செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
ஆனால், அரசு தரப்பில் கிடைத்த தகவலின்படி, எந்த அரசு அதிகாரியும் அந்த வீடியோவை பதிவு செய்யவில்லை என்றும், மாற்றுத்திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரே அந்த காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
