கோவையில் 13 வயது சிறுவன் கல்லாலும் மதுபாட்டிலாலும் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரின் 13 வயது மகன் திகில் என்ற சிறுவன், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். தற்போது கோடை விடுமுறை காரணமாக வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி, சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வாக்குவாதம் உருவானதாக கூறப்படுகிறது. அந்த வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த இரு சிறுவர்கள் சேர்ந்து, திகிலை கல்லாலும் மதுபாட்டிலாலும் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் தலையில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்ததாகவும், உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் காரணம் மற்றும் சூழ்நிலை குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
