கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத் (44). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பசிலா (38). மதுப்பழக்கத்திற்கு அடிமையான ரஷீத் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் வேலைக்கு செல்லும் முன் மதிய உணவுக்குக் கறிக்குழம்பு சமைத்து வைக்குமாறு மனைவியிடம் ரஷீத் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் மதிய உணவிற்காக வீட்டிற்குத் திரும்பியபோது, மனைவி கறிக்குழம்பு சமைக்காததைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ரஷீத், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். பசிலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அங்கு சிகிச்சைப் பலனின்றி பசிலா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வண்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பசிலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மனைவியைக் கொடூரமாக கொலை செய்த ரஷீத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கறிக்குழம்பு சமைக்காத மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
