இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் என்றாலே அவரவர்களுக்கென்று ஒரு ஸ்ட்ராடஜிக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. கடந்த 2021 தேர்தலில் திமுக, பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை வைத்திருந்தது. 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரிசனின் பென் நிறுவனத்தை வைத்து வேலைகள் நடந்தன.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் இதே வழியில்தான் இறங்கியது. அதிமுகவுக்காக பிரமாண்யா என்கிற நிறுவனம் ஸ்ட்ராடஜி வேலை எல்லாம் செய்து கொடுத்தது. இதற்காக திமுக பாணியிலேயே அதிமுகவும் பத்திரிக்கையாளர்களை எல்லாம் உட்கார வைத்து அதிமுகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராவும் கருத்துருவாக்கம் செய்கிற வேலையை செய்தார்கள். இதுக்காக சென்னை, தேனாம்பேட்டையில் மெய்நிகர் என்கிற ஒரு மீடியா நிறுவனம் செயல்பட்டு வந்தது. 2026 தேர்தலை ஒட்டி மெய்நிகர் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அதிமுகவுக்காக தேர்தல் பணிகளை செய்தது.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடியோட மகன் மிதுன்தான் இதற்கான பொருளாதார ஏற்பாடுகளை எல்லாம் கவனித்துக் கொண்டார். அவர் இதற்காக சில கோடிகளை மெய்நிகர் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார். ஆனால், மெய்நிகர் நிறுவனமோ அதன் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளத்தை தரவில்லை என்றும் அதில் வேலை பார்த்த பத்திரிக்கையாளர்களே இப்போது புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுக தலைமைக்கு
நெருக்கமானவர்களிடம் கேட்டால் ”நாங்கள் அளவுக்கு அதிகமாவே அந்த நிறுவனத்துக்கு கொடுத்து விட்டோம்” என்கிறார்கள். ஆனால் இதனால் கெட்ட பெயர் அதிமுகவுக்கு தான் வரும் என்பது புரியாமல் கட்சி தலைமை கண்டுகொள்ளாமல் இருக்கிறது எனச் சொல்லி மெய்நிகர் ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அலுவலகத்திலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில்தான் மெய்நிகர் நிறுவனத்தின் நிறுவனர் சத்தியமூர்த்தி சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மெய்நிகர் நிறுவன ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டு இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் வேறு ஒரு பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும் திரைமறைவிலிருந்து அந்த கட்சியோட அரசியல் உத்திகள், டிஜிட்டல் பிரச்சாரங்களை எல்லாம் கவனிக்கிற முக்கியமான ஆளாக இருந்து வந்துள்ளார்.
இப்போது மெய்நிகர் மீடியா நிறுவன தலைவர் சத்தியமூர்த்தி கைதானதால் மெய்நிகர் நிறுவனம் அதிமுகவுக்கு வேலை செய்தபோது அதற்கான தேர்தல் நிதிகள், கட்டணங்கள் யாரிடம் இருந்து எப்படி சென்றது என போலீஸ் அல்லது பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நிதி பரிமாற்றங்களில் மிதுனின் நேரடி தொடர்போ, கையெழுத்தோ, பணப்பரிவர்த்தனையோ இருந்தால் அவர் விசாரணைக்கு அழைக்கப்படவோ அல்லது சம்மன் அனுப்பப்படவோ சட்டப்படி வாய்ப்பு இருக்கிறது. இது முழுக்க முழுக்க பிரமாண்யா நிறுவனம் மூலமாகத்தான் மெய்நிகர் நிறுவனத்துக்கு பண பரிவர்த்தனைகள் எல்லாம் இருந்தது என திசை திருப்பப்பட்டாலும் பிரமாண்யா நிறுவனத்துக்கு யார் யார் மூலமாக நிதி வந்தது? என்கிற அடிப்படையில் சுற்றிச் சுற்றி அது எடப்பாடி மகன் மிதுனிடம் தான் போய் நிற்கும்.
சத்தியமூர்த்தி கைதானதே ஊழியர்களுக்கு கொடுத்த செக் பவுன்ஸ் ஆகி பணமில்லாமல் ரிட்டன் ஆனதால்தான். ஒருவேளை இந்த நிறுவனத்தின் முதலீட்டிலேயோ அல்லது அன்றாட பண பரிவர்த்தனைகள் முடிவு செய்வதிலோ மிதுனுக்கு மறைமுகமாக இதில் டீலிங் இருக்கிறதா? என விசாரணையில் உறுதியானால் அவர் மீது சட்டப்படியான கூட்டு சதி குற்றச்சாட்ட வைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என கொஞ்ச நாளைக்கு முன்தான் சொன்னார்.

ஆனால் கட்சியின் ஐடிவிங் மற்றும் வியூகங்களை மிதுன் கவனித்ததால் எதிர்கட்சிகள் இந்த மேட்டரை வைத்து ஊழியர்களை ஏமாற்றிய நிறுவனத்துக்கு பின்னணியாக எடப்பாடியார் இருந்தார் என ஒரு அரசியல் அட்டாக் செய்வதற்கு பிளான் திட்டம் போட்டு வருகிறார்கள். ஏனென்றால் தற்போதைய தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் வழக்கு பதியப்பட்டு இப்போது விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. தற்போதைய நிலையில் இன்னும் ஆறு அதிமுக மாஜிக்கள் தவெகவுக்கு தாவுவதற்கு ரெடியாக உள்ளனர்.
இந்தப் பிரச்சனையை இன்னும் கொஞ்சம் தீவிரமாக்கி எடப்பாடிக்கு ஒரு மறைமுகமான ஒரு அழுத்தத்தை கொடுத்து ஆட்டத்தை ஆடத் தயாராகிக் கொண்டு வருகிறது தவெக அரசு.
