நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் பெருபான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வந்தனர். அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதற்கு சி.வி.சண்முகம், எஸ்.வேலுமணி ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக வலுவான இருந்த திமுக கூட்டணியை உடைத்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்ததை அடுத்து தவெக கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. இதில், காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த கூட்டணியில் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது பிரதமர் வேட்பாளர் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும் தவெகவுக்கும் இடையேயான கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது பிரதமர் வேட்பாளர் லிஸ்ட்டில் முதல் இடத்தில் நரேந்திர மோடி, 2வது இடத்தில் ராகுல் காந்தி, மூன்றாவது இடத்தில் முதல்வர் விஜய் இடம் பெற்றுள்ளார். இதனை கொண்டாடும் வகையில் தவெகவினர் தமிழகம் முழுவதும் அடுத்த பிரதமர் விஜய் என்று போஸ்டர் ஓட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதாவது ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் தவெகவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார். அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் தவெகவினர் இன்னும் ரீல்ஸ் மோடிலே இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சி இல்லை என்றால் தவெக ஆட்சி அமைத்து இருக்காது, தவெக அமைச்சர்கள் இன்று அமைச்சராக இருந்திருக்க முடியாது என பேசி இருந்தார்.
இப்படி கூட்டணி காட்சிகளின் குடைச்சல்களை சரி செய்ய, மெஜாரிட்டியுடன் ஆட்சி நடத்த வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த தவெக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக தான் அதிமுகவில் இருந்து இதுவரை 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். ஆனால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இனைந்தாலும் கூட, இடைதேர்தல் நடக்குமா.? நடக்காதா.? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
அதிமுக கைவசம் இருக்கும் தற்போதைய 41 சட்டமன்ற உறுப்பினர்களில் 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் தவெகவில் இணைந்தால் கட்சி தாவல் சட்டம் பாயாது என்பதால் அவர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்யவேண்டிய அவசியம் இல்லை. அமைச்சரவையிலும் இடம் பெற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் அதிமுகவில் இருந்து 3ல் 2 பங்கு அதாவது 28 சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் தவெக பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ரகசியமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இனியும் அதிமுகவில் இருந்தால் அரசியல் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்ற மனநிலைக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து விட்டதால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பதவி ஆசையை காட்டி வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று தவெகவினர் ஸ்கெட்ச் போட்டு வருகின்றனர்.
