தலைநகர் டெல்லியில், நிர்பயா சம்பவத்தைப் போன்ற மற்றொரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி டதகவல் வெளியாகி உள்ளது. பரி சௌக்கில் இருந்து காஷ்மீர் கேட் வரையிலான 47 கிலோமீட்டர் பயணத்தின்போது, குற்றம் சாட்டப்பட்ட இருவர் அந்த மாணவியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த வழக்கில் டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்து, பேருந்து ஓட்டுநர், நடத்துநரைக் கைது செய்துள்ளது.
இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு காஷ்மீர் கேட் பகுதியில் நிகழ்ந்துள்ளது. தற்போது, பேருந்து ஓட்டுநர் குல்தீப், நடத்துநர் சந்தீப் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவி ஆவார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், தனது குடும்பத்தினர் மீது மனக்கசப்புடன் இருந்த அந்த மாணவி, அவர்களுக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி, நொய்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். கனமழை, இருள் காரணமாக, மாணவி கிரேட்டர் நொய்டாவில் உள்ள பரி சௌக்கில் தற்செயலாக இறங்கினார். இதற்கிடையில், ஒரு காலி ஸ்லீப்பர் பேருந்து அவ்வழியாகச் சென்றது. மாணவி பேருந்தை நிறுத்த சைகை காட்ட, அது நின்றது. ஓட்டுநரும், நடத்துநரும் தாங்கள் நொய்டா செக்டர் 63-க்குச் செல்வதாகக் கூறி, அவரைப் பேருந்தில் ஏற்றினர்.
பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நடத்துநர் பாதிக்கப்பட்ட மாணவியை நோக்கி ஆபாசமான சைகைகளைச் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலத்தில், ஓட்டுநரும், நடத்துநரும் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, எதிர்த்தால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், காஷ்மீர் கேட் பேருந்து நிலையம் அருகே உள்ள ரிங் ரோட்டில் நள்ளிரவில் பாதிக்கப்பட்ட மாணவியை இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
பயந்துபோன மாணவி காஷ்மீர் கேட் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு சம்பவம் குறித்துப் புகார் அளித்தார். திமர்பூரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் காவல்துறை கைது செய்தது. சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்லீப்பர் பேருந்தை காவல்துறை பறிமுதல் செய்து தடயவியல் பரிசோதனை நடத்தி வருகிறது.
பேருந்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநரும், நடத்துனரும் அதைச் சரிசெய்வதற்காக சூரஜ்பூரில் உள்ள ஒரு பட்டறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பேருந்தைச் சரிசெய்த பிறகு, ஓட்டுநரும் நடத்துநரும் காலியான பேருந்தில் திமர்பூருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர். கிரேட்டர் நொய்டாவில் உள்ள பரி சௌக்கில் அவர்கள் அந்த மாணவியைச் சந்தித்தனர். அந்தப் பேருந்து பரி சௌக்கில் இலிருந்து காஷ்மீர் கேட் வரை சுமார் 47 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளது. அந்தப் பேருந்து படுக்கை வசதி கொண்டதாகவும், திரைச்சீலைகள் பொருத்தப்பட்டிருந்ததாலும், அவ்வழியே சென்றவர்களால் உள்ளே பார்க்க முடியவில்லை.
