அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பணியாற்றினார். ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்து வந்தார். இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் கருப்பணனுக்கும் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு இடையே பனிப்போர் நிலவி வந்தது. கடந்த 2016-ல் மீண்டும் எம்.எல்.ஏ.வான பிறகு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. புறநகர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
பின்னர் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவில் சீட் வழங்கப்படாததால், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த தோப்பு வெங்கடாச்சலம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளராகப் அவர் நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு தோப்பு வெங்கடாச்சலம் தோல்வி அடைந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அடிப்படை உள்ளிட்ட திமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தோப்பு வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெருந்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தோப்பு வெங்கடாச்சலம்: திமுக தலைவர் ஸ்டாலின், என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராகவும் அறிவித்ததற்கு நன்றி. ஆனால் நான் மாவட்டச் செயலாளராக செயல்படுவதற்கும் சட்டப்பேரவை தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
இனிமேலும் என்னால் திமுகவில் பயணிக்க முடியாத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். பிற கட்சிகளில் சேரும் எண்ணம் இதுவரை என்னிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.
