தமிழக வெற்றி கழகத்தினர் தங்கள் தலைவர் விஜய்யை 2029-ஆம் ஆண்டின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதும், தவெக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் “விஜய் தான் அடுத்த பிரதமர்” எனக் குரல் கொடுத்து வருவதும் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தச் சூழலில், கன்னியாகுமரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார், 2029 பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார் பேசுகையில், ”அமைச்சர்கள் எல்லாம் அவர்கள் பேசும்போது எங்களுடைய முதல்வர் அடுத்த பிரதம என்று சொல்கிறார்கள். அதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் பத்திரிகை நண்பர்களாக இருக்கட்டும் அல்லது ஊடக நண்பர்களாக இருக்கட்டும். அவர்கள் என்னிடம் ஒரு அமைச்சர் என்கின்ற முறையில் கேட்கும்போது நான் மிக தெளிவாக சொல்லிவிடுகிறேன்.
வருகின்ற 2029 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார்.
ஒருவேளை தமிழக வெற்றி கழகம் அதற்கு உடன்படாவிட்டால் காங்கிரஸ் கட்சியினுடைய இரண்டு அமைச்சர்களும் இந்த பதவியில் நீடிக்க மாட்டார்கள். இது எல்லா இடங்களிலும் நாங்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏனென்றால், கட்சிதான் எங்களுக்கு பெரிது. இந்த கட்சி இல்லை இல்லாவிட்டால் இந்த ராஜேஷ் குமார் ஒன்றுமே கிடையாது. இந்த இயக்கம் தான் பெரிது. இந்த இயக்கம் என்ன நினைக்கிறதோ… நாளைக்கு இந்த பதவியை விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னால் அடுத்த நிமிடமே பதவியை விட்டு சென்றுவிடுவோம்.

ஆகவே பல்வேறு கருத்துக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கலாம். ஒவ்வொரு கொள்கை இருக்கலாம். நம்முடைய காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய கடைநிலை தொண்டருடைய முகம் ராகுல் காந்தி. என்னுடைய முகம் ராகுல் காந்தி. இந்திய மக்களுடைய முகம் ராகுல் காந்தி. அந்த முகம் ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியினுடைய கடைநிலை தொண்டர்களுடைய விருப்பம். அதை நிறைவேற்றியே தீருவோம் என்பதுதான் இந்த சபதம்” எனத் தெரிவித்தார்..
