திருச்செந்தூர் அருகே கடற்கரையோரப் பகுதியில் அமைந்துள்ள வலை பின்னும் கூடத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே கடற்கரையோரத்தில் ஜீவாநகர் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு, அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜீவாநகர் கடற்கரைப் பகுதியில் மீன்பிடி வலைகளைப் பின்னுவதற்காகவும், பழுதடைந்த வலைகளைச் சீரமைப்பதற்காகவும் வலை பின்னும் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
கடலுக்குச் செல்ல முடியாத நாட்களில் மீனவர்கள் இந்தக் கூடத்தில் பழைய மீன்பிடி வலைகளைச் சீரமைப்பது, சேதமடைந்த பகுதிகளை சரிசெய்வது மற்றும் புதிய மீன்பிடி வலைகளைப் பின்னுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் வலை பின்னும் கூடத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, கூடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த மீனவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
எனினும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைப்பதற்குள், வலை பின்னும் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான மீன்பிடி வலைகள் தீயில் சிக்கி எரிந்து சேதமடைந்தன. இதில் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
