நடிகை சமந்தா அண்மையில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், ராஜ் நிடிமோருவின் சகோதரி ஷீத்தல் நிடிமோரு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
சமந்தாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த ஷீத்தல் நிடிமோரு, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
அதில், “இதற்கு முன்பு நான் சமந்தாவின் படங்களைப் பார்த்ததில்லை. ஆனால், இரவு 3 மணிக்கு அவரின் அன்பான முகத்தை பார்த்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு சில நாட்களில், ஹைதராபாத்தில் உள்ள சமந்தாவின் வீட்டில் நான் தங்கியிருந்தேன்.
ஒரு நாள் நள்ளிரவில் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதிக குளிரால் நடுக்கம் ஏற்பட்டதுடன், வாந்தியும் எடுத்தேன். தலைவலியும் கடுமையாக இருந்தது.
படுக்கையில் இருந்து எழுந்து மருந்தோ, கூடுதல் போர்வையோ எடுக்க முடியாத நிலையில் இருந்ததால், குடும்ப வாட்ஸ்அப் குழுவில் வீட்டில் ஏதேனும் மருந்து இருக்கிறதா, போர்வை எங்கு இருக்கிறது என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.
சில நிமிடங்களில் சமந்தாவிடமிருந்து பதில் வந்தது. ‘நான் வருகிறேன்’ என்று கூறிய அவர், யாரையும் எழுப்பவில்லை. என் சகோதரரையோ அல்லது வேறு யாரையோ அனுப்பவில்லை. அவரே நேரடியாக வந்தார்.
போர்வைகள் எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால், பெரிய துணிகளை எடுத்து வந்து என் மீது போர்த்திவிட்டு, மருந்தையும் கொண்டு வந்து கொடுத்தார். அந்த இரவு முழுவதும் அவர் தூங்கவே இல்லை.
திருமணம் முடிந்து புதிதாக இருந்த சூழலில், மறுநாள் காலையில் அவருக்கு படப்பிடிப்பும் இருந்தது. அடுத்த நாள் நான் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றபோது, சேலையணிந்து சண்டைக் காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தார். முகத்தில் வழக்கமான புன்னகையுடனும், முழு உற்சாகத்துடனும் பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது என்னைப் பார்த்ததும், ‘ஷூட்டிங் எப்படி இருக்கிறது?’ என்று கேட்காமல், ‘இப்போது உடல்நிலை எப்படி இருக்கிறது?’ என்றுதான் முதலில் கேட்டார். அவரது முகத்தில் தெரிந்த அக்கறை இன்னும் என் நினைவில் இருக்கிறது.
முழு இரவும் தூங்காமல் இருந்துவிட்டு, அடுத்த நாள் எந்த சோர்வும் இல்லாமல் எப்படி இவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார் என்று நான் வியந்தேன். அந்த சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் இளகிய மனமும், அன்பான இதயமும் அனைவருக்கும் தெரியாது” என்று ஷீத்தல் நிடிமோரு பாராட்டியுள்ளார்.
இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள், “நாத்தனாருக்காக இவ்வளவு அக்கறை காட்டுவதற்கு பெரிய மனம் வேண்டும்; அது சமந்தாவிடம் நிறையவே உள்ளது” என்று அவரைப் பாராட்டி வருகின்றனர்.
