தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கடந்த மே மாதம் 13ஆம் தேதி நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வந்தபோது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக 25 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததுடன், மீதமுள்ள 21 எம்எல்ஏக்கள் கட்சித் தாவல் தொடர்பான கடிதம் அளித்திருந்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ளக் கோரிய மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அளித்திருந்தார்.
இதை ஏற்று, 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில், அந்த மனு திரும்பப் பெறப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் இல்லை. கொறடா உத்தரவின் மூலம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தாமாக முன்வந்து தங்கள் பதவியைத் துறக்கின்றனர். அவர்களின் மன்னிப்பை ஏற்று தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டது அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “இது கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையிலான பிரச்சினை. பொதுச்செயலாளர் மன்னித்துவிட்டதால், அவர்கள் மீண்டும் கட்சி உறுப்பினர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மூன்றாவது நபர் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், “கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களை கட்சி மன்னித்துவிட்டதால், அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவே தொடர்ந்து இருக்கின்றனர். அவர்கள் ராஜினாமா செய்யவில்லை. மனுதாரர் மூன்றாவது நபர்; கட்சி சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. சட்டப்படி 15 நாட்களுக்குள் மன்னித்து, தகுதி நீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதில் என்ன தவறு உள்ளது?” எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், தற்போதைய நிலையில் எந்தவிதமான கட்சித் தாவல் நடவடிக்கையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
