கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரவுடி ஆனந்தராஜ் (36). இவருக்கும், கீழ்வடக்குத்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரவுடி கோபி (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி கோபி தனது கூட்டாளிகளுடன் சென்று ஆனந்தராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், இந்திரா நகரைச் சேர்ந்த நரேஷ்குமார் (26) சம்பவ இடத்திலேயே படுகாயங்களுடன் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆனந்தராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 16 பேரில் 14 பேரை போலீசார் கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளியான ரவுடி கோபியை தேடிவந்தனர். இந்நிலையில் நெல்வேலி அருகே புலவன்குப்பத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரை சுற்றிவளைத்து பிடிக்க முயன்ற போது போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார். பின்னர் தற்காப்புக்காக போலீசார் ரவுடி கோபியை காலில் சுட்டதில் வலியால் அலறி துடித்தார்.
இதனையடுத்து காயமடைந்த ரவுடி கோபி மற்றும் காவலர்கள் பாண்டியராஜன் (33), விஜயலாதசோழன் (36) இருவரும் நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் கடலூரில் துப்பாக்கி சத்தத்தால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
