Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி அக்ஷிதா, TNEA 2026 பொறியியல் கலந்தாய்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

அவர், 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றதுடன், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தனது வெற்றிக்குக் காரணம் குறித்து பேசிய அவர், “என்னுடைய கடின உழைப்புடன், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் நண்பர்கள் அளித்த முழு ஆதரவுதான் இந்த வெற்றிக்குக் காரணம். அவர்களின் ஊக்கமும் வழிகாட்டுதலும் இல்லாமல் இந்தச் சாதனையை எட்டியிருக்க முடியாது,” என்றார்.

தேர்வுக்கான தயாரிப்பு குறித்து அவர் கூறுகையில், “தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து படித்தேன். குறிப்பாக ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். ஒரு மதிப்பெண் வினாக்களை தொடர்ந்து பயிற்சி செய்ததால், கோட்பாட்டு பாடங்களையும் கணிதப் பிரச்சினைகளையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது,” என்று தெரிவித்தார்.

உயிரியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரை: “தேர்வு நெருங்கிய பிறகு படிக்காமல், ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு படிக்க வேண்டும். குறிப்பாக உயிரியல் பாடத்தை கடைசி நேரத்தில் முழுமையாகப் படிப்பது சிரமமாக இருக்கும்,” என்றார்.

மேலும், “11ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு இல்லை என்பதற்காக அந்தப் பாடங்களை அலட்சியப்படுத்தக் கூடாது. அவற்றையும் சமமாகக் கற்றுக்கொண்டால், உயர்கல்வியில் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்று வலியுறுத்தினார்.

படிப்புடன் சேர்த்து மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தேவையற்ற வகையில் கைப்பேசி பயன்பாடு மற்றும் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில், அதை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துங்கள். அதிகாலை நேரப் படிப்பை வழக்கமாக்கினால் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், பின்னர் அது மிகவும் எளிதாகிவிடும்,” என்றார்.

தனது பள்ளி மூத்த மாணவர்கள் தமக்கு அளித்த ஊக்கமும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு கட்டத்திலும் வழங்கிய வழிகாட்டுதலும் இந்த வெற்றிக்குப் பெரும் காரணம் எனக் கூறிய அக்ஷிதா, தனது பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், மூத்த மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

“எனக்கு எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் ஆசிரியர்களும் பெற்றோரும் உடனுக்குடன் விளக்கம் அளித்து உதவினர். அவர்களின் தொடர்ந்த ஆதரவே இந்தச் சாதனையை சாத்தியமாக்கியது,” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago