கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
தன்னுடன் காரில் மொத்தம் ஆறு பேர் இருந்ததாகவும், சுமன் சக்திவேல் என்பவரே காரை ஓட்டி சம்பவத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
“அன்று இரவு சுமார் 9 மணியளவில் நாங்கள் நால்வர் ஒரு பொழுதுபோக்கு மையத்திற்குச் சென்றோம். அங்கு இருந்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர் மதுபானம் அருந்தியிருந்தார். அவர்களின் வயது 19 மற்றும் 17 என நினைக்கிறேன். எங்களுடன் இருந்த மற்றொரு இளைஞருக்கு 19 வயது இருக்கும்.
அந்த இடத்தில் நடனமாடிக் கொண்டிருந்தபோது சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பெண்களுடன் நடந்து கொண்ட விதம் தொடர்பாக நான் சிலரிடம் பேசினேன். அதையடுத்து அங்கிருந்த சிலர் என்னைத் தாக்கினர். பின்னர் அந்த பிரச்சினை முடிந்ததாக நினைத்து வெளியே வந்தோம்.
வெளியே வந்த பிறகு எங்களுடன் இருந்த இளைஞர் ஒருவர் ஸ்கூட்டியை ஓட்டினார். இரண்டு பெண்கள் நடுவில் அமர்ந்திருந்தனர். நான் பின்புறம் அமர்ந்திருந்தேன். அப்போது எதிரே வந்த கார் எங்களை பின்தொடர்ந்தது.
முன்னதாக ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர்கள் எங்களை குறிவைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் கார் எங்கள் வாகனத்தின் மீது மோதியது. அதில் நாங்கள் கீழே விழவில்லை. பின்னர் மீண்டும் வேகமாக வந்து இரண்டாவது முறையாக மோதியது. அதில் அனைவரும் கீழே விழுந்தோம்.
ஒரு இளம்பெண் தூக்கி வீசப்பட்டு சாலையோரத்தில் இருந்த கல் அல்லது தடுப்பில் தலையில் பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மற்றொரு இளம்பெண் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் இவ்வளவு மோசமாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த பெண்ணுக்கு இப்படியான நிலை ஏற்பட்டது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
காரில் மொத்தம் ஐந்து அல்லது ஆறு பேர் இருந்தனர். அவர்களில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கார் ஓட்டியவர் மட்டும் அப்போது பிடிபடவில்லை.
நாங்கள் வார இறுதிகளில் வழக்கமாக அங்கு செல்வோம். எனக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் கிடையாது. அங்கிருந்த டிஜே நண்பர்களுடன் பேசுவது அல்லது நடனமாடுவதற்காகவே செல்வேன். சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இரண்டு பெண்களும் மதுபானம் அருந்தியிருந்தனர். நாங்கள் வாகனம் ஓட்ட வேண்டியிருந்ததால் மதுபானம் அருந்தவில்லை.
இந்த சம்பவம் இரண்டு இளம் பெண்களின் வாழ்க்கையையும் சீரழித்துவிட்டது. நடந்ததை நினைத்தாலே மிகவும் வேதனையாக உள்ளது” என்று அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்
