https://republictn.com/

தமிழக அரசியல் களம் எப்போதும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்கும், அதற்கு இணையான விமர்சனத் தாக்குதல்களுக்கும் பஞ்சமில்லாதது. 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இரு திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் பல கோல்டன் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமா? வெறும் ‘சினிமாத்தனமான’ கவர்ச்சியா? என்பதை முரசொலி நாளேடு ஒரு கார்ட்டூன் மூலம் மிகக் கடுமையாகக் கேலி செய்துள்ளது.

த.வெ.க-வின் தேர்தல் அறிக்கையில் பெண்களைக் கவரும் விதமாகப் பல அறிவிப்புகள் இடம்பெற்றன. குறிப்பாக. ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவியாக ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என்கிற அண்ணன் சீர் திட்டம். தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு சார்பில் ஒரு தங்க மோதிரம், ‘பேபி கிட்’ வழங்கப்படும் என்கிற
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை வழங்கும் மதிப்புமிகு மகளிர் திட்டம் திட்டங்களை அறிவித்து இருந்தார் விஜய்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் தி.மு.க- அ.தி.மு.க-வின் இலவசத் திட்டங்களுக்குப் போட்டியாக அறிவிக்கப்பட்டவை. விஜய் வெற்றி பெற இந்த திட்டங்களும் முக்கிய காரணம். ஆனால், பொருளாதார வல்லுநர்கள் எழுப்பும் கேள்வி “ஏற்கனவே கடனில் இருக்கும் ஒரு மாநிலத்தால் இத்தனை சவரன் தங்கத்தை எப்படி அள்ளித் தர முடியும்?” என்பதே.

முரசொலி கார்ட்டூன், விஜய்யின் இந்தத் தங்க வாக்குறுதிகளை வெறும் வாய்ஜாலம் என்ற கோணத்தில் விமர்சித்துள்ளது.அதில், முதல் கட்டம்: ஒரு பெண் திருமணத்திற்காக “விஜய் அண்ணா, ஒரு சவரன் கொடுங்க” எனக் கேட்கிறார்.இரண்டாம் கட்டம்: அதே பெண் குழந்தையுடன் வந்து “தாய்மாமன் சீராக குழந்தைக்கு மோதிரம் போடுங்க” என்கிறார்.

மூன்றாம் கட்டம் : இதற்கு விஜய் பதில் சொல்வது போல “ஐயோ, நான் என்ன செய்வேன்… உங்க மோடி தாத்தா தங்கம் வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாரே?” என முடிகிறது.

இந்தக் கேலிச்சித்திரம் இரண்டு விஷயங்களைச் சொல்லாமல் சொல்கிறது. ஒன்று, த.வெ.க-வின் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்த முடியாதவை. இரண்டு, விஜய் மோடி அறிவிப்பை காட்டி சப்பைக் கட்டு கட்டலாம் என்கிற மறைமுகமாக விலகல்.

விஜய்யின் தேர்தல் அறிக்கையில் “நிதி தன்னாட்சி” பற்றிப் பேசப்பட்டாலும், ஒரு சவரன் தங்கம், மோதிரம் போன்ற திட்டங்களுக்குத் தேவைப்படும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மத்திய அரசின் நிதிப் பகிர்வு மிக அவசியம். ஆனால், சமீபகாலமாகத் தங்கம் இறக்குமதி மற்றும் சேமிப்பு தொடர்பான மத்திய அரசின் கெடுபிடிகளை முன்னிறுத்தி, விஜய்யால் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என முரசொலி சாடுகிறது.

“சொல்வது எளிது, செய்வது கடினம்” என்பதுதான் இந்த விமர்சனத்தின் சாரம். விஜய் தனது திரைப்படங்களில் வருவது போல மேஜிக் செய்து திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்பதையும், மாநிலத்தின் நிதிநிலை, மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய ‘தங்க’ கனவுகள் நனவாகாது என்பதையும் முரசொலி இடித்துரைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago